Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 40 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 40 -- எதிர்த் தந்திரம்!
ராமப்பட்டணத்திலிருந்து பஸ் புழுதியைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டது. ஆனால் கிளம்பிய வேகத்தில் அதனால் வெகுதூரம் போய்விட முடியவில்லை. ஊர் எல்லையைத் தாண்டியதுமே உள்ள குறுகிய பாலத்தைக் கடக்க முடியாமல் நின்றுவிட்டது. காரணம் பாலத்தில் ஒரு மாட்டு வண்டி மையத்தில் நின்றிருந்ததுதான். அதிலிருந்து கோபாலகிருஷ்ணன் ஒரு பெட்டி, கூஜா சகிதம் இறங்கினார்.
பஸ்ஸைநோக்கி நடந்து வந்து அதில் ஏறியபடியே, "என்னை ஏமாற்றிவிட்டுப் புறப்படலாம் என்று பார்த்தீர்களா? அதெல்லாம் இந்த ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனிடம் பலிக்காது. தம்பிங்களா!" என்றார்.
அப்புறம் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி,"ஆறுமுகம்! வண்டியை வீட்டுக்குத் திருப்பி ஓட்டுடா! பஸ் போகட்டும்!" என்று உரக்கக் கத்தினார்.
"அம்மாவிடம் கல்யாணமும் நானும் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவோம்னு சொல்லு..... துணைக்கு வேணும்னா மதுரவல்லி வீட்டோடு வந்து இருக்கட்டும்."
"சரிங்க" என்றான் ஆறுமுகம். பஸ் தொலைவில் வருவதைப் பார்த்துவிட்டுப் பாலத்தை அடைத்துச் சற்றுமுன் வண்டியை நிறுத்தியவன், இப்போது பஸ்ஸுக்கு வழி விட்டு 'ஜல் ஜல்' என்று சதங்கை ஒலிக்கச் சென்றான்.
"போகட்டும், போகட்டும்! ரைட்!" என்றார் கோபாலகிருஷ்ணன். பஸ் மீண்டும் நகரத் தொடங்கியதும், "ஏண்டா, கல்யாணம்! நல்ல பிள்ளைக்கு அடையாளமா சொல்லிக்காமல் கிளம்பி விட்டாயாக்கும்"என்றார்.
"எப்படிப்பா, உங்களுக்கு விஷயம்தெரிஞ்சுது?"
"நீதான் சங்கத்தின் காண்டீன் பையனை உன் அம்மாவிடம் ரகசியமா அனுப்பி வைச்சியே? அவன் உன் அம்மாவின் உருட்டல், மிரட்டல் பேச்சு காதில் விழுந்தவுடனே அவள் தான் வீட்டு