"நீங்க வந்ததே நல்லதாப் போச்சுப்பா" என்றான் கல்யாணம், ஈனஸ்வரத்தில்.
"ஆமாம். எல்லோருமே திடும்மென்று போய் நிற்கிறோம். அதனால் மத்தியானச் சாப்பாடு எப்படியானாலும் இரவு விருந்து பிரமாதமாய் அமையணும்னு போனதுமே சொல்லிவிடலாம். லட்டு மலை, பாதாம்கீர் ஆறு, சாம்பார் சமுத்திரம்! கல்யாணம் உனக்குப் பாதாம்கீர் ரொம்பப் பிடிக்குமே!" என்று கூறிச் சிரித்தார் கோபாலகிருஷ்ணன்.
கல்யாணத்துக்கு அப்போதே விளக்கெண்ணெயை விழுங்கியது போலிருந்தது. அவன் நண்பர்கள் யாரும் பேசவில்லை. என்ன செய்வது? எப்படி நடந்து கொள்வது என்ப தொன்றும் புரியாமல் யோசித்துக் களைத்துப் போய் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு, கோபாலகிருஷ்ணன் தலையும் ஆடிவிழ ஆரம்பித்தது. மனம் பதைக்கக் கண் விழித்து அமர்ந்திருந்தவன் கல்யாணம் ஒருவன்தான்.
நண்பர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் தான் ஒரு கையாலாகாதவனாக அவமானப்பட்டு நிற்பது போல் உணர்ந்தான். 'நினைத்த காரியம் என்ன? நடப்பது என்ன? அப்பாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவது எப்படிச் சாத்தியம்? அவர் அதட்டலுக்கு எல்லோரும் அடங்கிப் போய் விட வேண்டியதுதான். யாருக்குமே தைரியம் வராது! அப்புறம் அப்பாவே குறிப்பிட்டது போல் லட்டு மலைக்கும், பாதாம்கீர் ஆறுக்காகவுமே ஆசைப் பட்டு இந்த இளைஞர் பட்டாளம் கல்யாணத்துக்குச் சென்றதாகும். பின்னால் இந்தத் தோல்வியைச் சுட்டிக் காட்டி நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்யும்போது அதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? அதுதான் போகட்டும், அத்தனை தூரம் மார் தட்டிப் பேசிவிட்டு வந்தாயே, பவானியிடம்! அவள் முகத்தில் இனி எப்படி விழிப்பது?' நினைக்க நினைக்கக் கல்யாணத்தின் மனம் பதறியது.
மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ஒரு சின்ன ஊரில் பஸ் நின்றது. டிரைவரும் கண்டக்டரும் டீ சாப்பிட்டு வர இறங்கினார்கள். கல்யாணம் பஸ்ஸுக்குள் நோட் டம் விட்டான். கோபாலகிருஷ்ண முதலியார் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். கல்யாணம் பஸ்ஸை விட்டு இறங்கி டிரைவர், கண்டக்டரைப் பின்தொடர்ந்தபோது அவனுடன் அவன் நண்பர்கள் இருவர் மட்டுமே வந்தார்கள். மற்றவர்கள் அரைத் தூக்கத்திலோ ஆழ்ந்த