எஜமானனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, உன் உத்தரவுப்படி எஜமானியம்மாளைத் தேடி நேரே என்னிடம் வந்துவிட்டான்! ஒரு பெட்டியிலே உனக்கு இரண்டு சட்டை வேஷ்டி வைத்துக் கொடுக்குமாறு கேட்டான். 'எதுக்குடா' என்றேன்."
"உடனே எல்லாவற்றையும் உளறிக் கொட்டி விட்டானா?" என்று கல்யாணம் பதற்றமும் கோபமுமாகக் கேட்டான்.
"பின்னே? ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணனின் குறுக்கு விசாரணையில் யாராவது தப்ப முடியுமா, என்ன? அவன் காப்பி ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த போதுதான் நீங்க உங்க திட்டத்தை உருவாக்கினீங்களாம்!"
"என்னப்பா, சொன்னான்?"
"நீங்க இப்போ செய்து கொண்டிருக்கும் காரியத்தைத்தான் விவரித்தான். 'திருநீர்மலையில் ரங்கநாத முதலியார் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கிறார். ஆனால் கல்யாணம் ஸாருக்கு எப்படியோ விஷயம் அம்பலமாகி விட்டது. நண்பர்களோடு போய் அவரை அதிசயத்தில் ஆழ்த்தப் போகிறார்' என்றான்."
"அவ்வளவுதானா, அப்பா?"
"இவ்வளவு போதாதா? இன்னும் என்ன? ரங்கநாத முதலியார் என் ஆப்த நண்பர். அவருக்கு நான்தான் வக்கீல். அப்படியிருந்தும் அவர்தான் எனக்கு விஷயத்தைத் தெரிவிக்காமல் ஏமாற்றினார் என்றால் நீயுமா அப்பாவுக்குத் தெரியாமல் கம்பி நீட்டப் பார்க்கணும்?"
நிம்மதிப் பெருமூச்சு விட்டான் கல்யாணம். "அதற்கில்லை, அப்பா! உங்க நன்மையை உத்தேசித்துத்தான் நான் கூற வில்லை. உங்களுக்கு விஷயம் தெரியவந்தால் வராமலிருக்க உங்க மனசு கேட்காது. ஆனால் பஸ் பயணம் சிரமம். உட்கார்ந்தபடியே போகணும். அதுவும் இரவு நேரம். கண் விழித்தால் உடம்புக்கு ஆகுமா?"
"உன் கரிசனம் கிடக்கட்டும். கல்யாணம். சரீரத்துக்காகப் பார்த்துச் சிநேகத்தை விட்டு விட முடியுமா? எத்தனை வருஷப் பழக்கம் எனக்கும் ரங்கநாதனுக்கும்!"