வேண்டும். வேளா வேளைக்குச் சமைத்துக் கணவனுக்குப் போட்டு அவனைக் காரியாலயம் அனுப்ப வாசலில் வந்து வழி அனுப்பி, மாலையில் அவன் வீடு திரும்புவதை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க வேண்டும் என்று விரும்பினாள் ராதா.
கணவனுடன் கடற்கரை செல்ல வேண்டும்; நாடகம் பார்க்க வேண்டும்; கோவிலுக்குப் போக வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக 'காதல் இருவர் கருத்தொருமித்து' இல்லறம் நடத்த வேண்டும் என்கிற ஆவள் அவல் மனதை சூழ்ந்து கொண்டு வாட்டியது.
தனக்கும் மூர்த்திக்கும் இடையில் பல மைல்கள் தூரம் இருப்பதையும் மறந்து ராதா சிந்தனையின் வசப்பட்டவளாகச் சட்டென்று பீரோவைத் திறந்து தன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தாள். இனிமேல் அந்த வீட்டில் இருக்க விருப்பமில்லாதவள் போல் அவளுடைய முக்கியமான வஸ்துக்கள் யாவையும் பெட்டியில் வைத்துப் பூட்டினாள். அந்த வினாடி அவள் மனத்தில் அந்த வீட்டுக்கும். அவளுக்கும் சம்பந்த மில்லாத ஓர் உணர்ச்சி தோன்றியது. உடனே எப்படி யாவது மூர்த்தியின் இருப்பிடத்துக்குச் சென்று விட வேண்டும் என்கிற ஆசை அவள் மனதில் எழுந்தது.
கடைசியாகப் பணப் பையில் ரூபாயை எடுத்து அவள் வைத்துக் கொண்டிருக்கும் போது அறையின் வாசற்படியில் சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே வந்து நின்றார்.
"என்னம்மா ! எங்கே கிளம்புகிறாய். பெட்டி எல்லாம் எடுத்துத் தயாராக வைத்திருக்கிறாயே? உன் புருஷனிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா?" என்று விசாரித்தார்.
ராதா சிறிது நேரம் சிலை மாதிரி நின்றாள். கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. நெஞ்சிலே துயரச் சுமை பாரமாக அழுத்தியது. விவரிக்க முடியாத ஒரு கலக்கம் அவள் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தது.
சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே உள்ளே வந்தார்.
"ராதா! உன்னைப் பார்த்தால் என் வயிற்றைச் சங்கடம் செய்கிறது. எவ்வளவோ விஷயங்களை நீ என்னிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறாய். துயரங்களை மனசில் வைத்துப் பூட்டி வைத்தால் மட்டும் அவை வெளியே தெரியாமல் போய் விடுமா? உன் மனம் துயரத்தில்