பாடத்துச் சிரித்தாள்.
”மிஸ்டர் நாகராஜன்! நீங்கள் இத்துடன் ஆறு தடவைகள் பீடாவை மென்று விட்டீர்கள்" என்றாள்.
”எப்படி அவ்வளவு கணக்காகச் சொல்லுகிறீர்கள்?" என்று ஸ்ரீதரன் கேட்டார்.
”இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் நான் கவனித்து வருகிறேன். பவானி இந்த விருந்தில் சரியாகவே சாப்பிடவில்லை. ராதா இலையில் உட்கார்ந்ததைப் பார்த்தேன். மறுபடியும் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் கை அலம்பிக் கொண்டு வந்து விட்டாள். நாகராஜ்ன் வெறுமனே பீடாவை மென்றே வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார். ஜெயஸ்ரீதான் கல்யாணப் பெண் ஆயிற்றே! அவளுக்குச் சாப்பாட்டின் மீது நினைவே இல்லை. கோமதிக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. நாத்தி ஊருக்குப் போவதைப் பற்றிக் கவலையில் மூழ்கி இருக்கிறாள்" என்றாள் காமாட்சி.
பவானி ஊருக்குப் போவதைப் பற்றி கோமதி ஒருத்திக்கு மட்டும் துயரம் ஏற்பட வில்லை. எல்லாருமே மனம் வருந்தினர்.
கடைசியாக பவானி, டாக்டர் ஸ்ரீதரனிடம் தான் ஊருக்குப் போய் வருவதாக அறிவித்துக் கொண்டாள்.
ஸ்ரீதரன் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தார். ஒரு விநாடிக்குள் அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மறந்தார். ஆழ்கடலுக்குள்ளே முழுகி எழுந்து முத்துக் குளிப்பவன் கையில் பலரகச் சிப்பிகள் கிடைக்கின்றன. அவற்றிலே ஒரு சிப்பிக்குள்ளிருந்து அழகிய முத்தைக் கண்டு பிடிக்கிறார்கள். அப்புறம் அந்த முத்து சமூகத்திலே ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அடைகிறது. சமூகத்தில் கணவனை இழந்தவர்கள், கணவனால் புறக்கணிக்கப்பட்டவர்கள், வாழ வகை தெரியாத வர்கள், வாழ்க்கைச் சூதில் தம்மையே சூதாட்டக் காய் களாக வைத்து இழந்தவர்கள் என்று எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த உலகத்தில் வாழ வேண்டியவர்கள் தாம்.
அவர்களுக்கு உலக வாழ்வு இருண்டு போகாமல் இருக்க அநேக உழைப்பாளிகள் தேவை.