Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 24 - மு. வரதராசனார்
ஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அங்காவது ஒரு வேலை தேடித் தருமாறு வேண்டிக் கொண்டேன். அவ்வாறே அவர் அடுத்த முறை சென்னைக்கு சென்றபோது இதே கூட்டுறவுத் துறையில் நூறு ரூபாய் வருவாயில் இன்ஸ்பெக்டர் தொழில் பெற்றுத் தந்தார். மாலனுக்கு அதுவும் பெரிய மனக்குறையாக இருந்தது. நான் முந்நூறு ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற, என்னுடன் என்னைப்போல் படித்த ஒருவன் நூறு ரூபாயளவில் நின்றது யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? ஆனாலும் என்ன செய்வது? வேறு வழி இல்லையே என்று அத்தொழிலில் கொஞ்ச காலம் மனம் பொருந்தி இருக்குமாறு மாலனுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
சென்னைக்குப் போகவேண்டிய வாய்ப்பு எனக்கு ஒரு முறை நேர்ந்தது. தொழில் துறையின் தொடர்பாகவே போயிருந்தேன். முன்னதாகவே மாலனுக்கு எழுதியிருந்தேன். அவனுடைய வீட்டுக்கே போயிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு கற்பகத்தைப் பார்த்தது அப்போதுதான். "வாங்க" என்று அவள் வரவேற்றாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி இருந்தபோதிலும் சிறுமியாக இருந்தபோது கண்ட துடிதுடிப்பு இல்லை. மாலன் தன் குழந்தையைக் கொண்டு வந்து என் கையில் தந்தான்.
அன்போடு பெற்றுத் தோள்மேல் ஏந்திக்கொண்டு "என்ன பெயர்?" என்றேன்.
"எழுதியிருந்தேனே! மறந்துவிட்டாயா! நீ பெரிய உத்தியோகத்தில் இருக்கிறாய். என்னைப் போன்ற ஆட்களை எல்லாம் நினைவில் வைத்திருப்பாயா?" என்றான்.
"அப்படி என்னிடம் சொல்லக்கூடாது. நான் என்றைக்கும் உன் நண்பன். ஏதோ வாய்ப்பு என்று சொல்கிறார்களே! அதன்படி எனக்குப் பெரிய வேலை கிடைத்தது. உனக்குக் கிடைக்கவில்லை. அதற்காக வருத்தப்படாதே."
"சும்மா சொன்னேன்."