கிடைக்க மாட்டான்" என்றான்.
என் தங்கையின் வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது. உடனே அதைப் பொருட்படுத்தாமல், "இந்தப் பையனுமா அப்படிப் பணம் கேட்பான்?" என்றேன். குழந்தை திருவாய்மொழி அப்போது தன் பொக்கை வாய் திறந்து முழுச் சிரிப்பு சிரித்தான். அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எல்லோருமே குழந்தைகளாய் மாறிச் சிரித்தோம்.
மறுநாள் சென்னைக் கடமையை முடித்துக்கொண்டு ஊர்க்குப் புறப்பட்டேன். மாலன் ரயிலடிக்கு வந்திருந்தான். அவனுக்குத் தேறுதல் சொன்னேன். "இங்கே இருந்தபடியே வேறு நல்ல தொழில் கிடைத்தால் மாறிவிடலாம்" என்றேன்.
"எங்கே கிடைக்கிறது? வர வர வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. படிக்காதவர்கள் நன்றாகப் பிழைக்கிறார்கள். பணம் தேட அவர்களுக்கு வழி தெரிகிறது. படித்தவர்களுக்குத் தெரியவில்லை. எங்கள் ஊரில் நெல் ஆலை வைத்த ஒருவர் இன்றைக்குப் பெரிய செல்வராகி விட்டார். என்னோடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது வரையில் படித்தவன் லாரி வைத்துப் பணக்காரனாகி விட்டான். என்னை இந்த நூறு ரூபாய்ச் சம்பளத்துக்கு அழைக்கிறான். பேசாமல் இந்த வேலையை உதறிவிட்டு ஒரு நெல் ஆலையாவது லாரியாவது வைத்து நடத்தலாமா என்று எண்ணுகிறேன். அதைப்பற்றித்தான் இனி முயற்சி செய்ய வேண்டும்" என்றான்.
"அவசரப்படாதே நன்றாக எண்ணிப்பார். நமக்குப் பழக்கம் இல்லாத துறைகள்."
"படிக்காதவர்கள் செய்யும்போது படித்தவர்கள் செய்யக்கூடாதா?"
"வேண்டா என்றோ கூடாது என்றோ நான் சொல்லவில்லை. எண்ணிப் பார்த்து, ஒரு முறைக்குப் பல முறை எண்ணிப் பார்த்து இறங்கவேண்டும். படித்ததனாலேயே நமக்குத் திறமை இருப்பதாகச் சொல்ல முடியாது. சின்ன பிள்ளைகள் ஒரு நாளில் சைக்கிள் விடக் கற்றுக்கொள்கிறார்கள். வளர்ந்த பெரியவர்கள் கற்றுக்கொள்ள ஒரு வாரத்துக்கு மேலும் ஆகிறது."
என் பேச்சை அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.