எண்ணியிருப்பான். கல்லூரியில் படித்தபோதே சோதிடத்தை நான் நம்பவில்லை. அப்போது, 'உனக்கு ஒன்றும் தெரியாது' என்று இகழ்ந்தவன் அவன். அதே மனநிலையோடு இப்போதும் என் அறிவுரையை இகழ்ந்து ஒதுக்கியிருக்கக் கூடும். இப்படி மனைவியைத் தாய் வீட்டுக்கு அனுப்பிப் பணம் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று எண்ணிவிட்டிருப்பான். எப்படியோ போகட்டும். தொழில் நன்றாக நடந்த பிறகாவது திருந்தினால் போதும் என்று ஆறுதல் அடைந்தேன்.
ஐந்தாம் மாதம் மனைவியையும் மாதவியையும் அழைத்து வருவதற்காக ரயில் ஏறி ஊருக்குப் புறப்பட்டபோது மாலனுக்கு உதவி செய்ததைப் பற்றி வீட்டில் யாருக்கும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டேன். தையல்பொறி வாங்குவது பற்றி அம்மா ஏதாவது கேட்டாலும் திருடனைத் தேள் கொட்டியது போல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
நான் வீட்டுக்குள் நுழைந்தவுடனே தங்கை மணிமேகலையைத் தான் கண்டேன். அவளுக்கு செய்வதாகச் சொன்ன உதவியை நினைத்து மனம் திக்கென்றது. ஒருவாறு மனத்தை மாற்றிக்கொண்டு பேசினேன். மனைவியும் குழந்தையும் இருந்தார்கள். அம்மா இல்லை. எங்கே என்று கேட்டேன். கற்பகத்தின் அண்ணி இறந்துவிட்டதாக சொல்லவே அம்மாவும் அவர்களோடு நேற்றுப் புறப்பட்டுப் போனார்கள் என்றாள் தங்கை. "நேற்று கற்பகம் அழ, மாமி அழ, வீடு ஒரே துயரமாக இருந்தது. மாமிதான் மிகுதியாக அழுதார்கள்" என்றாள் மனைவி.
"என்ன காரணம்? திடீரென்று இறந்துபோன காரணம்" என்றேன்.
"யாருக்குமே தெரியாது. அம்மா வந்தால்தான் தெரியும்" என்று சொல்லிக்கொண்டே பாக்கியம் வந்தார்.
என்னென்னவோ எண்ணினேன். சந்திரன் ஏதாவது கொடுமை செய்திருப்பானோ என்றும் ஓர் எண்ணம் வந்தது. சே, என்ன கெட்டவனாக இருந்தாலும் அந்த எல்லைக்குப் போயிருக்க மாட்டான் என்று தெளிந்தேன்.
அன்று பகல் உணவுக்கு உட்கார்ந்தபோது, பாக்கியம் தங்கையையும் மனைவியையும் உடன் உட்கார்ந்து உண்ணுமாறு வற்புறுத்தினார். "மாதவி தூங்குகிறாள். அவள் எழுவதற்கு முன்னே