Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 04 - நா. பார்த்தசாரதி
மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.
"வசந்தி அக்கா...! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் குடுத்த 'ஏரோகிராமை' அவசரப்பட்டு இன்னிக்கே போஸ்ட் பண்ணிட வேண்டாம்னு உடனே உங்ககிட்ட சொல்லிட்டு வரச் சொன்னா..."
"ஏண்டி...? திடீர்னு இப்போ என்ன வந்திடுத்து உங்கப்பாவுக்கு....?"
"அதென்னமோ... தெரியலே, வேண்டாம்னு சொல்லிவிட்டு வரச் சொன்னார்..."
பார்வதியை வசப்படுத்துவதற்கு மிகச் சுலபமான வழி ஒன்று வசந்திக்குப் புலப்பட்டது.
"பாரு! ரவி அண்ணா இப்போ ஊருக்கு வரணும்னு உனக்கும் ஆசை தானே...?"
"ரவி அண்ணாவைப் பார்த்து மூணு வருஷத்துக்கு மேலே ஆச்சு வசந்தி அக்கா...! எனக்கும், குமாருக்கும் அம்மாவுக்கும் அண்ணாவை உடனே பார்க்கணும்னு கொள்ளை ஆசை."
"அப்படியானா நீ ஒரு உபகாரம் பண்ணனும் பாரு! நீ என்னைப் பார்க்கிறதுக்குள்ளேயே நான் இந்த ஏரோகிராமை தபால்லே சேர்த்தாச்சுன்னு உங்க அப்பாட்டச் சொல்லிடணும். ரவி அண்ணாவைப் புறப்பட்டு வரச் சொல்லி சித்த முன்னே தான் இதிலே எழுதிக் கையெழுத்துப் போட்டுக் குடுத்தார் உங்கப்பா. இப்போ இதைப் போஸ்ட் பண்ண வேண்டாம்னு அவரே சொல்லியனுப்பிச்சதா நீ சொல்றே... உங்கப்பா என்ன பண்ணுவாரோன்னு எனக்கும் பயமா இருக்குடி. வரச்சொல்லி எழுதியிருக்கிற இந்த லெட்டரைக் கிழிச்சுப் போட்டுட்டு வர வேண்டாம்னு இன்னொரு லெட்டர் எழுதப் போறாரோ என்னமோ?"
"ஐயையோ! அது வேண்டாம் அக்கா! நீங்க இதையே போஸ்ட் பண்ணிடுங்கோ... நான் உங்களைப் பார்க்கறத்துக்குள்ளேயே நீங்க 'ஏரோகிராமை'ப் போஸ்ட் பண்ணியாச்சுன்னு அப்பாட்டச் சொல்லிடறேன்."