Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 05 - நா. பார்த்தசாரதி
விசுவேசுவர சர்மாவும், இறைமுடிமணியும், பல ஆண்டுகளுக்கு முன் சங்கரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழர்கள். வாழ்க்கைப் பாதையில் இருவரும் வேறு வேறு திசைகளில் நடந்தாலும் பழைய நட்பு என்னவோ நீடிக்கத்தான் செய்தது. அவர்கள் தனியேயும், தங்களுக்குள்ளேயும் பேசிக் கொள்ளும்போது இருவரும் ஒருவரை மற்றொருவர் நீ - நான் - வா - போ என்று உரிமை பாராட்டி ஏக வசனத்தில் பேசிக் கொள்ளுவார்கள். ஆனால் மற்றவர்களிடம் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குறிப்பிட்டுப் பேச நேரும் போதெல்லாம் அவர், இவர் என்று மிகவும் மரியாதையாகத்தான் குறிப்பிட்டுப் பேசுவார்கள். எதிரெதிரான வாழ்க்கை முறைகளையும், கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காமல் நட்பையும் இழந்து விடாமல் அவர்களால் பழக முடிந்தது. அந்த அதிகாலை வேளையில் அன்று இறைமுடிமணி தன்னைத்தேடி வந்த காரியம் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக இருந்தது சர்மாவுக்கு. வந்தவர் தாமாகச் சொல்லுவதற்கு முன் தானே வலிய அவசரப்பட்டு விசாரிப்பது நன்றாக இராது என்று சர்மா இறைமுடிமணியின் குடும்ப ஷேம லாபங்களை விசாரிக்கலானார். இறைமுடிமணியும் சர்மாவின் குடும்ப ஷேம லாபங்களை விசாரித்தார்... பேச்சு ரவியைப் பற்றி விசாரிப்பதில் வந்து நின்றது.
"தம்பிகிட்ட இருந்து லெட்டர் ஏதாச்சும் உண்டா?"
"...போட்டுருக்கான்... புறப்பட்டு வரதாக்கூட எழுதியிருக்கான்..."
"எப்ப வருதாம்...."
"தேதி எழுதலே... சீக்கிரமா வருவான்... வரச் சொல்லிப் பதில் எழுதிப் போட்டிருக்கேன்."
மனந்திறந்து பேசுவதற்கும் நம்பிக்கைக்கும் உரிய சிநேகிதனிடம் உண்மை நிலையைச் சொல்லி யோசனை கேட்கலாம் என்று சர்மாவுக்குத் தோன்றியது. இருந்தாலும் இறைமுடிமணி தன்னைத் தேடி வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன் தான் எதையும் பிரஸ்தாபிக்க வேண்டாம் என்று இருந்தார் அவர்.
இறைமுடிமணி அதிகமாக நேரத்தைக் கடத்தாமலும் சுற்றி வளைக்காமலும் வந்த காரியத்தைச் சொல்லி விட்டார்.