Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 06 - நா. பார்த்தசாரதி
யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்து திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்த அந்த மங்கலமான வைகறை வேளையில் ஒரு மணமகளை ஆசீர்வாதம் செய்வது போலத்தான் சர்மாவும் அவளை வாழ்த்தியிருந்தார். சர்மாவின் மனம் ஓர் இனிய திருப்தியில் நிறைந்திருந்தது. கமலி கீழிறங்கி நின்றதும் அவளது அழகிய உடலிலிருந்து பரவிய வசீகரிக்கும் தன்மை வாய்ந்ததொரு செண்ட்டின் நறுமணம் புழுதி படிந்த அந்த ரயில் நிலையத்து பிளாட்பாரம் முழுவதும் பரவியது. பந்துக்கள் உற்றார் உறவினர்களில் யாராவது ஓர் இளம் பெண் திருமணமான புதிதில் வந்து தம்மை வணங்கினால் தயக்கமில்லாமல் என்ன ஆசீர்வாதச் சொற்களை அவர் வாய் முணுமுணுக்குமோ அதே ஆசீர்வாதச் சொற்களைத்தான் இப்போதும் கூறியிருந்தார் அவர். முயன்றால் கூட அவர் வித்தியாசமாக நடந்து கொள்ள முடியாது போலிருந்தது. இது விஷயத்தில் அவர் மனமே அவருக்கு எதிராயிருந்தது. வசந்தியைப் பார்த்ததும் கமலி அப்படியே கட்டித் தழுவிக் கொண்டாள். ரவிக்கு வேணு மாமாவும் கமலிக்கு வசந்தியும் மாலையணிவித்தனர். 'வெல்கம் டூ சங்கரமங்கலம்'... என்று கை குலுக்குவதற்கு முன் வந்த வேணு மாமாவிடம் புன்னகை பூத்த முகத்துடன் "ஹேண்ட் ஷேக்கிங் இஸ் நாட் ஆன் இண்டியன் கஸ்டம்" - என்று கூறிக் கைகூப்பினாள் கமலி. தங்கை பார்வதியையும், தம்பி குமாரையும் ரவி கமலிக்கு அறிமுகப்படுத்தினான். பார்வதியின் முதுகில் பிரியமாகத் தட்டிக் கொடுத்து அவளிடம் தமிழிலேயே பேசினாள் கமலி. குமாரிடம் அன்பாக அவன் படிப்பைப் பற்றி விசாரித்தாள். ரவி எல்லா விவரங்களையும் அவளுக்குத் தெளிவாகச் சொல்லி வைத்திருந்தானென்று புரிந்தது. எந்த விநாடியிலும் எதற்கும் அவள் குழப்பமடைந்து தடுமாறவில்லை.
அங்கே புதிதாக வந்து புதிதாக முதல்முறை அறிமுகமாகிப் பேசுகிறவர்களிடம் பதில் பேசுவது போலக் கமலி பேசவில்லை. தெரிந்து பலமுறை பழகிய குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களிடம் பேசிப் பழகுவதுபோலச் சுபாவமாகவே பேசிப் பழகினாள் அவள்.
ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே ஒரு சிறிய கூட்டம் கூடிவிட்டது. வித்தியாசமான நிறத்தில் வித்தியாசமான நடையுடை பாவனைகளோடு யாராவது தென்பட்டால் சிறிய ஊர்களில் ஒவ்வொருவரும் நின்று உற்றுப் பார்ப்பார்கள். இந்தியக் கிராமம் என்பது ஆவல்கள் நிறைந்தது. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சமயத்திலும் கூர்ந்து கவனித்துவிட