Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 07 - நா. பார்த்தசாரதி
மறுபடியும் இரண்டாவது தடவையாக ரவி குரல் கொடுத்தபோது, "எல்லாம் தெரியறதுடா? சித்தே இரு... குளிக்காமேக் கொள்ளாமே உள்ளே வந்துடாதே... தோ வரேன்" என்று சமையலறைக்குள் இருந்து பதில் வந்தது.
உள்ளே அம்மா தயிர்ப்பானையில் மத்தால் வெண்ணெய் கடைந்து கொண்டிருந்தாள். ஆயர்பாடியில் யசோதை தயிர் கடையும் போது சின்னக் கண்ணன் வெண்ணெய்க்காகத் தன் பிஞ்சுக் கையை நீட்டிக் கொண்டிருப்பது போன்ற வழக்கமான காலண்டர் ஓவியம் ஒன்றிலிருக்கும் யசோதையின் தோற்றத்தைப் போலத்தான் அம்மாவின் தோற்றமும் அப்போது அழகாக இருந்தது.
"நான் போயிட்டு அப்புறம் வரட்டுமா அம்மா? ஸ்நானம் பண்ணிட்டு வந்தாத்தான் நீ பேசுவியா?"
"இருடா... வரேன்..."
"எங்கிட்டே உனக்கென்ன கோபம்?"
"அதை என்னைக் கேழ்ப்பானேன்? நோக்கே தெரியாதோ?"
"நான் என்ன பண்ணிட்டேன் அப்படி?"
"என்னடா பண்ணனும் இன்னம்?"
அம்மாவுடைய மனஸ்தாபத்தின் கனம் முழுவதும் அந்த 'இன்னம்' என்ற கடைசி வார்த்தையில் இறுகித் திரண்டிருப்பது ரவிக்குப் புரிந்தது. அப்பா கூட ஓரளவு ஒத்து வந்திருப்பது போல் அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அம்மாதான் கரைக்க முடியாத கருங்கல்லாக இருப்பாளோ என்று பயந்தான் அவன். மனத்தாங்கலும், ஆதங்கமும் தெரியும்போது தான் இதயம் சுருங்கி விடுகிறாற் போல அவளுடைய பதில் வார்த்தைகள் மிகவும் சுருங்கியிருப்பதை ரவி கண்டான். பத்து நிமிஷத்துக்கு மேல் அவன் சமையல் கட்டின் வெளியே காத்து நிற்க வேண்டியிருந்தது.
அப்புறம் தான் ஒரு வழியாக அம்மா வெளியே வந்தாள். "தள்ளி நின்னுண்டு கையை நீட்டுடா