Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 12 - நா. பார்த்தசாரதி
சர்மா இறைமுடிமணியை நோக்கிக் கூறினார்: "பேராசை, சூதுவாது, மத்தவங்களை ஏமாத்திச் சம்பாதிக்கிறது இதெல்லாம் முன்னே டவுன் சைடிலே தான் யதேஷ்டமா இருந்தது! இப்போ நம்பளுது மாதிரிச் சின்னச் சின்ன கிராமங்கள்ளேயும் அதெல்லாம் வந்தாச்சு. ஏமாத்திச் சம்பாதிக்கிறது ஒண்ணும் பெரிய தப்பில்லேன்னு நியாயப்படுத்திப் பேசவும் ஆரம்பிச்சுட்டா. பண்ற தப்புக்களை ஒண்ணொண்ணா நியாயப்படுத்திக்கிறது தான் நாகரீகம்னு நாசூக்குன்னும் இப்பல்லாம் புது 'பிலாஸபியே' வந்தாச்சாக்கும்...."
"விசுவேசுவரன்! இன்னைக்கு நீ செய்திருக்கிற இந்த உதவிக்கு உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே அப்பா. என்னை விட அதிக வாடகை, அதிக முன் பணம் எல்லாம் தரேன்னு விடாக்கண்டன் ஒருத்தன் போட்டிக்கு வந்தும் நீ அந்த மனையை எனக்கே வாடகைக்கு விட்டிருக்கே. இடமோ ஆத்திகர்கள் நிறைந்த மடத்துக்குச் சொந்தமான அக்கிரகாரத்துக்கு நடுவிலிருப்பது. நானோ ஊரறிந்த நாத்திகன். சுய மரியாதைக்காரன். அப்படி இருந்தும் நீ அந்த இடத்தை முதல்லே சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு எனக்கு விட்டிருக்கே."
"நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடலே தேசிகாமணீ! நியாயம் எதுவோ அதைத்தான் செஞ்சிருக்கேன்!...."
"அப்படியில்லேப்பா! இது நிஜமாகவே பெரிய காரியம்தான். இந்த அக்கிரகாரத்து மூணு தெருவுங்களிலேயும் நான் யாரையும் பெரிசா மதிக்கறதில்லே. ஆனா அதே சமயத்தில் உன்னை மதிக்காமே இருக்கவும் என்னாலே முடியலே."
மிகவும் நெருங்கிய சிநேகிதரான இறைமுடிமணியே திடீரென்று நேருக்கு நேர் தன்னைப் புகழத் தொடங்கவே சர்மா திக்குமுக்காடிப் போனார். கூச்சத்தோடு சொன்னார்:-
"நமக்குள்ளே மூணாம் மனுஷா மாதிரி இப்படிப் புகழ்ந்துக்கறது நன்னா இல்லே."
"நிஜத்தைத்தானே சொல்றேன்?"
"ஒரு நிஜம், மனுஷனைத் தலை கனத்து வீங்கிப் போகச் செய்யும்படியானதா இருக்குமானா