Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 13 - நா. பார்த்தசாரதி
காமாட்சியம்மாள் நேரடியாகக் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை என்றாலும் பார்வதியை அவள் கண்டித்துக் கொண்டிருந்த வார்த்தைகளின் வேகம் கமலியையும் பாதித்தது. சமையலறைக்குள் தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் பார்வதியைப் பார்த்ததும் முதல் கேள்வியாக "ஏண்டி! உன்னை சந்தி விளக்கை ஏத்தி வாசப்பெறையிலே வைக்கச் சொன்னா ஏத்தியாச்சுன்னு வந்து சொல்றதில்லையா? நீ பாட்டுக்கு ஏத்தி வச்சுட்டு ஊர் சுத்தப் போயிடறதோ" என்று கண்டித்து இரைந்திருக்கிறாள்.
"நீ எப்ப சொன்னேன்னே எனக்குத் தெரியாதும்மா? நான் வீட்டுக்கே இப்பத்தான் வரேன். நீ சொன்னதை நான் கேக்கவும் இல்லை. சந்தி விளக்கு ஏத்தவும் இல்லே" என்று பார்வதி இரைந்து பதில் சொல்லியது காதில் விழுந்து மாடியில் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த கமலி கீழே இறங்கி வந்தாள்.
"நீங்க சொல்ற போது பார்வதி வீட்டிலேயே இல்லை. உங்கள் குரலைக் கேட்டு நான் தான் வந்து விளக்கேற்றி வைத்தேன்" என்று கமலி சொல்லி அதே சொற்களை இன்னும் உரத்த குரலில் அம்மாவுக்குக் காது கேட்கும்படி மறுபடி எடுத்துச் சொன்னாள் பார்வதி.
காமாட்சியம்மாள் இதைக் கேட்டு நேருக்கு நேர் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை. பார்வதியைத் தான் மேலும் கடிந்து கொண்டாள். ஆனால் அவள் பார்வதியைக் கண்டித்த சொற்களிலேயே கமலிக்கு மன வேதனை உண்டாக்கும் அர்த்தம் தொனித்தது.
"ஆத்து மனுஷா விளக்கேத்தணும்டீ! அப்பதான் லட்சுமி வீட்டிலே தங்குவா. வந்தவா போனவாள்ளாம் விளக்கேத்தறாப்பில விட்டுட்டு நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போயிடறதாடீ?"
-அம்மா இப்படி எடுத்தெறிந்தாற் போல் பேசினது பார்வதிக்கே பிடிக்கவில்லை. மென்மையான இதயம் படைத்த கமலிக்கும் அது சற்றே உறைத்தது. இந்த சமயத்தில்தான் ஆற்றங்கரைக்குச் சந்தியா வந்தனம் செய்யப் போயிருந்த சர்மா திரும்பியிருந்தார். அப்போது அங்கே என்ன நடந்து கொண்டு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. எந்தத் தகராறு உருவாகாமல் தவிர்ப்பதற்காக ஆற்றங்கரைக்குப் புறப்படுவதற்கு முன் கமலி தான் விளக்கேற்றி வைத்தாள் என்பதை அவர் காமாட்சியம்மாளிடம் கூறாமல் போயிருந்தாரோ அந்தத் தகராறே மெல்ல உருவாகியிருந்தது இப்போது.