Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 14 - நா. பார்த்தசாரதி
சர்மா சிறிது தயக்கத்திற்குப் பின் மீண்டும் ரவியைக் கேட்டார்:
"நீ சொல்றே. அதை நான் கூட ஒத்துண்டுடறேன்னே வச்சுக்கோ. உங்கம்மா ஒத்துக்கணுமேடா? அவளுக்கு இன்னம் முழுவிவரமும் தானாவும் தெரியலே. தெரிவிக்கப்படவும் இல்லே. அதுக்குள்ளேயே ஆயிரம் சந்தேகப்படறா... உங்கம்மாவுக்குப் பயந்து முதல்லே உன் லெட்டர் கிடைச்சதும் நானும் வேணுமாமாவுமாகக் கலந்து பேசி உன்னையும் கமலியையும் அவர் வீட்டு மாடியிலேயே தங்க வச்சுடலாம்ன்னு கூட ஆரம்பத்திலே யோசிச்சோம்." -
"இப்போ புரியறது அப்பா! நாங்க ரெண்டு பேருமாத் தொடர்ந்து இங்கேயே தங்கியிருக்கிறது சாத்தியமான்னுதானே நீங்க கேக்கறேள்?"
"நீ இங்கே தங்கிக்கிறதைப் பத்திப் பேச்சே இல்லே; இது உன் வீடு. உன் அப்பா உன் அம்மா உன் மனுஷா உனக்கும் அம்மாவுக்கும் பெரிசாச் சண்டை எதுவும் வந்துடப் போறதில்லே. கமலி தங்கிக்கிறதைப் பத்தி தான் இப்போ பிரச்சனை. உனக்கு ஆட்சேபணை இல்லேன்னாக் கமலியை மட்டும் வேணு மாமா வீட்டு மாடியிலே தங்க வச்சுடலாம். அவாளே காஸ்மாபாலிடன். ரொம்ப நாகரிகம்கிறதாலே அவா வீட்டிலே இவளாலே அவாளுக்கு எந்தச் சிரமமும் வராது."
"அப்படிப் போறதா இருந்தாக் கமலியை மட்டும் தனியா அவா வீட்டுக்குப் போகச் சொல்ல முடியாதுப்பா, இட் வோண்ட் லுக் நைஸ். நானும் கூடவே போயிட வேண்டியதுதான்."
"அவ போறதைப்பத்தி ஒண்ணுமில்லே. ஆனா நீயும் அவளோட சேர்ந்து போயிட்டாத்தான் அதுக்குக் கண்ணு மூக்குக் காது வச்சு ஊர்ல வீண் வம்பு வதந்தியெல்லாம் கிளம்பும்..."
"என் அபிப்பிராயம் கமலியும் இங்கேயே நம்கூட இருக்கலாம்கிறதுதான். அம்மாவாலே சிரமங்கள் ஏற்பட்டாலும் கமலியாலே அதைச் சமாளிச்சுக்க முடியும்..."
"நீ சொல்றே.... ஆனாக் கமலியும் என்ன நினைக்கிறாள்னு எனக்குத் தெரிய வேண்டாமா?"
"இதுலே ஒளிவு மறைவு எதுக்கு? என்னோட வாங்கோ! இப்ப அவளையே கேட்டுடலாம்..."