Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 15 - நா. பார்த்தசாரதி
ஒரு புராதனமான வைதீகக் கலாசாரம் நிறைந்த தென்னிந்திய வீடும் அதன் அசௌகரியங்களும், முரண்டுகளும் மிக்க குடும்பத் தலைவியும் பழைய தழும்பேறிய பழக்க வழக்கங்களும், கமலியைப் போன்ற ஓர் ஐரோப்பியப் பெண்ணுக்குப் பெரிய இடையூறுகளாக இருக்கும் என்று சர்மா எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கமலி அந்த வீட்டையும், அதன் கலாச்சாரப் பிடிப்புகளையும் காமாட்சியம்மாளின் கட்டுப்பாடுகளையும் நேசித்து மதித்துக் கடைப்பிடிக்கத் தொடங்கினாளே ஒழிய வெறுக்கவில்லை. அந்த வீட்டின் நடைமுறைகளுக்கு ஏற்ப அவள் தன்னை மாற்றிக் கொண்டாளே தவிரத் தன்னுடைய வசதிகளுக்கு ஏற்ப அந்த வீட்டையும் அதன் பழங்காலத்து மனிதர்களையும் நடைமுறைகளையும் ஒரு சிறிதும் மாற்ற முயலவில்லை. கமலியைப் பொறுத்துச் சர்மாவின் மனநிலை நெகிழ்ந்து மெல்ல மெல்ல அவள் மேல் அநுதாபமாக மாறியதற்கு அவளுடைய இந்த நனி நாகரிகப் பண்பே காரணமாயிருந்தது.
ரவியும் கமலியும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஊர் திரும்பிய தினத்தன்று இரவு தனியாக ரவியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "உங்கள் அம்மா வீணையும் கையுமாக அமர்ந்திருந்த காட்சி சரஸ்வதி தேவியே வாத்தியத்தோடு வந்து உட்கார்ந்து கொண்டிருந்த மாதிரித் தோன்றியது" என்று கமலி கூறினாள்.
'இப்போதெல்லாம் மிகவும் நவீனமான புதிய டிப்ளமஸி, ஓயாமல் புகழ்ந்தே எதிர்ப்பையும் எதிரியையும் அழிப்பதுதான் கமலி!' - என்று கேலியாக அதற்கு உடனே பதில் சொல்ல எண்ணிய ரவி அவள் காமாட்சியம்மாளைப் புகழ்ந்த குரலிலிருந்த பக்திபூர்வமான தொனியையும், மனப்பூர்வமான ஆழத்தையும் உணர்ந்து கொண்டு அதை வேடிக்கையாக்கிவிடப் பயந்து தயங்கியவனாகத் தன் எண்ணத்தையும் கேலியையும் தவிர்த்துக் கொண்டு பேசாமலிருந்தான். எண்ணியதை விட்டு விட்டு வேறு விதமாகப் பேசினான்:
"எங்க அம்மா ஒரு புராதனமான தென்னிந்திய வைதீகக் குடும்பத்தின் பூர்ணமான அம்சங்கள் அத்தனையும் சிறிதும் குறைவில்லாமல் உள்ளவள். பூர்ணமான என்றால் ப்ளஸ் பாயிண்ட் மைனஸ் பாயிண்ட் ரெண்டையும் சேர்த்துத்தான் சொல்றேன். ஆனா அம்மாவைப் பொறுத்தவரை எல்லாமே ப்ளஸ் பாயிண்டா மட்டும் தான் உன் கண்ணுக்குப் படறது..."
"ஒரு விஷயத்தின் சாதகப் பாதகத்தைக் கணக்கிடும் போது நமக்கு ஒத்து வராததை எல்லாமே