Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 16 - நா. பார்த்தசாரதி
இறைமுடிமணி அவர்களைத் தம்முடைய புதுக் கடைக்கு வரவேற்று உட்கார வைத்துச் சந்தனம் கல்கண்டு கொடுத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் புறப்படுவதற்கு முன், "கொஞ்சம் இப்பிடி வர்றியா விசுவேசுவரன்? உங்ககிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்" - என்று சர்மாவைக் கூப்பிட்டார் இறைமுடிமணி. சர்மா எழுந்திருந்து இறைமுடிமணியோடு சென்றார்.
கடைக்கு வலது பக்கம் காலியாயிருந்த புல்தரையில் நின்று கொண்டு அவர்கள் இருவரும் பேசினார்கள்.
"அகமத் அலி பாய்க்கு நீ இந்த இடத்தை விடலேங்கிற கோபத்திலே அந்தச் சீமாவையன் ஊர் பூராத் துஷ்பிரசாரம் பண்ணியிருக்கான். நான் ஏதோ அக்கிரகாரத்து வாசிகளைச் சண்டைக்கு இழுக்கறதுக்காகத்தான் இங்கே கடை போட்டிருக்கேனாம். என் கடையிலே அக்கிரகாரத்து ஆளுங்க யாரும் சாமான் செட்டு வாங்கப்படாதுன்னு வேற இந்த ஊர் பூராப் பிரச்சாரம் பண்ணியிருக்கான் அந்த ஆளு. நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். வியாபாரத்துக்காகக் கொள்கையைக் காத்திலே பறக்கவிடற ஆளு நான் இல்லே. அதே சமயத்திலே கடைக்கு வியாபாரத்துக்கு வர்றவங்க தலைமேலே எல்லாம் அரிப்பெடுத்துப் போய் வலிந்து என் கொள்கையைத் திணிக்கிறவனும் இல்லை. வியாபாரத்தை எப்பிடி நியாயமா வளர்க்கணுங்கிறது எனக்குத் தெரியும். ஆயிரம் சீமாவையரு வந்தாலும் என்னை ஒண்ணும் பண்ணிட முடியாது."
"அதெல்லாம் சரிதான் தேசிகாமணி! உன் உரிமையிலே நான் தலையிடறேன்னு தப்பா நெனைச்சுக்காதே. இந்த இடமோ மடத்துக்குச் சொந்தம். சூழ்நிலையோ முழுக்க முழுக்கத் தெய்வபக்தியுள்ள மனுஷாளுது. இங்கே நடத்தப் போற ஒரு பலசரக்குக் கடைக்கு இந்தப் பேரு, இந்தப் படம் எல்லாம் ஒரு விதத்திலே பெரிய எடைஞ்சலா இருக்கும்னு படலியா உனக்கு?"
"இடைஞ்சலா இருந்தா இருக்கட்டும்பா! அதுக்காக ஒவ்வொரு இடத்துலே நடத்தற கடைக்கும் ஒவ்வொரு வேஷம் போடற ஆளு நான் இல்லே. வியாபார நஷ்டத்தை விடக் கொள்கை நஷ்டத்தைப் பெரிசா மதிக்கிறவன் நான்..." - ஆவேசமாக இதைச் சொன்னார் இறைமுடிமணி.