Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 17 - நா. பார்த்தசாரதி
கமலி தன் மனத்தின் உருக்கம் தெரியும் குரலில் வசந்தியிடம் சொன்னாள் -
"உங்களுடைய பழைய கோவில்கள் கலைச் சுரங்கங்களாக இருக்கின்றன. ஆனால் உங்கள் நாட்டு மக்கள் இப்போது சினிமாத் தியேட்டர்கள் என்னும் புதிய 'கோவில்களின்' வாசலில் போய் பயபக்தியோடு நிற்க ஆரம்பித்து விட்டார்கள். பக்தி இடம் மாறிவிட்டது. கோயில்களும் தெய்வங்களும் தியேட்டர்களில் சிகரெட் புகையின் நெடி குமட்டும் புதிய சூழலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறார்கள் இன்று." -
"சரியாகச் சொல்கிறாய்! இங்கே கோயிலிலிருப்பதைவிட இதே நேரத்திற்கு இவ்வூர் ஆற்றங்கரையில் இருக்கும் டூரிங் தியேட்டரில் உள்ள கூட்டம் தான் அதிகம் கமலி." -
"மாக்ஸ் முல்லர் கால முதல் கிழக்கு நாடுகளின் கலாசாரத்தில் மேற்கே ஒரு மயக்கமும் பிரியமும் தோன்றி விட்டது. 'ஸேக்ரட் புக்ஸ் ஆஃப் தெ ஈஸ்ட்' என்று வேதங்களையும் உபநிஷதங்களையும் மாக்ஸ் முல்லர் ஆக்ஸ்போர்டில் வால்யூம் வால்யூமாக மொழி பெயர்த்து அச்சிட ஆரம்பித்தது தொடங்கி மேற்கேயிருந்து கிழக்கே திரும்பிப் பார்த்தல் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அதே சமயம் கிழக்கே இருந்த நீங்கள் உங்களுடையவற்றை மறந்து ஆச்சரியத்தோடு மேற்கே திரும்பிப் பார்க்கவும் மேற்கின் லௌகீக வாழ்வை வியக்கவும் விரும்பவும் ஆரம்பித்து விட்டீர்கள்."
"உண்மை தான் கமலீ! ஆனால் இன்றைய இந்தியா முன்னைவிட இன்னும் லௌகீகமாகிவிட்டது. சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய வறுமை கலாசார வறுமை தான்! வெறும் வயிற்றுப் பசியைவிடக் கலாச்சாரப் பசி மிகவும் பொல்லாதது." -
"ஆமாம்! கலாசார வறுமையும், ஆன்மீக வறுமையும் பயங்கரமானவை. ஒரு நாட்டைப் படுகுழியில் வீழ்த்தக் கூடியவை."
- இந்த உரையாடல் பூமிநாதபுரம் கோயிலிலிருந்து திரும்பும்போது அவர்களுக்குள்ளேயே நடந்தது. கமலி ஒரு முழுமையான இந்துவாக - இந்தியப் பெண்ணாக நடந்து கொள்ளுவதில் காட்டும் தாகத்தையும் தவிப்பையும் ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனித்தாள் வசந்தி.