கானகத்துக்குத் தன்னைப் பழக்கிக் கொண்ட கதை நினைவுக்கு வருகிறது. மனித குலம் நாகரிகப் பரிமாணத்தில் முன்னேறிய பின் திசை கெட்டுத் தறிகெட்டுக் குப்புற விழத் திரும்பிப் பார்க்கிறது.
"எந்தா யமு?"
"பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடம்மா. உடம்புக்குச் சுகமில்லையாம்மா?" கமலம்மா பூஜையறையிலிருந்து வருகிறார்.
"பேர் பேராகக் கேட்கிறீர்கள்?..."
முரமுரத்த ரொட்டி வில்லைகளும் வெண்ணையும் பழப் பச்சடியும் கொண்ட தட்டத்தை ஏந்தி வருகிறான் சுப்பையா.
"காப்பியா, டீயா..." என்று அவன் மெல்லக் கேட்கையில், "டீயே இருக்கட்டும்" என்று கூறிவிட்டு யமுனா ரொட்டி வில்லையில் வெண்ணை தடவிக் கொண்டு, "நீங்கள்?... நீங்கள்?" என்று சுதீரையும் ஜோசஃபையும் பார்க்கிறாள்.
"இன்னிக்கு இங்கே ஏதானும் வேலை இருக்கா யமு?" என்று கமலம்மா கேட்கிறார்.
"இல்லே, பொருட்காட்சி சாமான்களைப் பிரேமாவும் ரங்கனும் எடுத்துக் கொண்டு வருவார்கள். நான் எல்லோருடனும் போகிறேன் ஆசிரமத்துக்கு."
"அப்ப... அடுத்த மாசமோ, அதற்கடுத்த மாசமோ மெட்றாஸ் வருவாய்?"
"அது-நிச்சயமில்லை. ஒரு நினைப்பு இருக்கிறது. வந்தால் உங்களைப் பார்க்காமல் போவேனா?"
"நீ பெரியப்பா வீட்டில் தங்குவாய்..."
"எனக்கு எல்லாம் ஒன்று தான் கமலம்மா..."