என்று எண்ணி, கதவருகே போய்ப் பார்த்தேன். பூட்டிய பூட்டு அப்படியே இருந்தது. கொட்டாவி விட்டபடியே வந்து மறுபடியும் படுத்துக்கொண்டேன்.
அன்று அலாரம் 5 மணிக்கு வைத்திருந்தேன். ஆனால் அது அடிக்கவில்லை. அலாரத்துக்குச் சாவி கொடுக்க மறந்துவிட்டேன் என்பதைப் பிறகு கண்டேன். நான் விழித்தபோது மணி 5-30 ஆகியிருந்தது. பரபரப்போடு எழுந்தேன். மாணவர்கள் படிக்கும் குரல் பல கேட்டன. மரங்களில் காக்கை, குருவிகளின் பேச்சும் பாட்டும் கேட்டன. இன்பமான குயில்கள் இரண்டு மாறி மாறிக் கூவும் காதல் பாட்டின் இசையும் கேட்டது. இத்தனை குரல்களையும் கேட்டுக் கைகால் நீட்டித் திமிர்விட்டபடியே சிறிது நேரம் கிடந்தேன். சந்திரன் நினைவு வந்தது; பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை அவனுக்காகக் கவலைப்பட்டுப் படிக்க வைத்ததை எண்ணினேன். இன்னும் சில மணி நேரத்தில் அவனுடைய விஞ்ஞானப் பாடத்தின் தேர்வு தொடங்குமே, படிக்காமலே, இருந்தால் அவன் எப்படிப் போய் எழுதுவான் என்று கவலைப்பட்டேன். முந்திய நாள் பகலில் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. "இனிமேல் தேர்வு எழுதமாட்டேன்; ஊருக்குப் போகமாட்டேன். அப்பாவுக்கு எழுதிவிடு" என்று சொன்னான். அதை நினைத்தவுடன் என் உள்ளம் திடுக்கிட்டுக் கலங்கியது.
உடனே எழுந்து சந்திரனுடைய அறையைப் பார்த்தேன். ஒரு மாறுதலும் காணப்படவில்லை. பரபரப்போடு திரும்பி வந்தேன். என் அறைக்குள் நுழைந்தபோது சன்னலின் கீழே ஒரு சாவி இருப்பதைக் கண்டேன். அது சந்திரனுடைய அறையின் சாவிபோலவே இருந்தது. அதை எடுத்துச்சென்று அவனுடைய அறையின் பூட்டைத் திறந்தேன் அது திறந்தது. என் மனம் மிகக் கலங்கியது. முந்திய இரவு நான் உணவுக் கூடத்துக்குப் போயிருந்தபோது, தன் அறையை பூட்டிச் சாவியைச் சன்னல் வழியாகப் போட்டுவிட்டு வெளியேறிப் போயிருப்பான் என எண்ணினேன். நொந்தேன். அவனுடைய அறைக்குச் சென்றேன். மேசைமேல் ஏதேனும் கடிதம் வைத்துவிட்டு போயிருக்ககூடும் என்று பார்த்தேன். அங்கு ஒன்றும் இல்லை. அறை வழக்கம் போலவே இருந்தது. அவனுடைய தோல்பை மட்டும் காணோம். பெட்டி முதலியவை அப்படியே இருந்தன. பெட்டி பூட்டப்பட்டுச் சாவி கீழே வைக்கப்பட்டிருந்தது. எல்லாம் திட்டமிட்டுச் செய்திருக்கிறான் என்பது நன்றாகத் தெரிந்தது. அறையைப் பூட்டிவிட்டு, மாலனிடம் விரைந்து சென்றேன். அவனுக்கு எல்லாச் செய்தியும் சொன்னேன். "வா, போகலாம். உடனே தபால் நிலையத்துக்குப் போய் அவனுடைய அப்பாவுக்கு ஒரு தந்தி கொடுப்போம்" என்றேன்.