”ஏதாவது மருந்து சாப்பிடேன்!"
“சாப்பிட்டேன். அண்ணாவின் அலமாரியைத் திறந்து எடுத்துக் காலையிலேயே சாப்பிட்டேனே."
அவள் எதுவும் சாப்பிடவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். தினம் மூன்று வேளைகள் தலைவாரிப் பின்னிக் கொள்கிறவள் சேர்ந்தாற் போல் இரண்டு நாட்கள் தலைவாரிக் கொள்ளவே இல்லை.
"இன்று வெள்ளிக்கிழமை, தலையைப் பின்னி பூ வைத்துக் கொள் அம்மா" என்று சுவாமிநாதன் புஷ்பச் சரத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார். அதை மேஜை மீது வைத்து விட்டுக் கவனியாதவள் போல் இருந்தாள் ராதா.
தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும், விதம் வித மாக உடுத்துவதிலும் விருப்பமுடைய ராதா, இப்படி எதிலும் பற்றில்லாமல் இருப்பது வேதனையாக இருந்தது.
குறுகிய காலத்தில் ராதாவின் போக்கில் பெருத்த மாறுதல் ஏற்பட்டிருந்தது. வெளியில் எதையும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தாள் அவள். ஒரு தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மூர்த்தியிடம் அவள், ”நீங்கள் இப்படியே இருந்தால் எப்படி?" என்று கேட்டேவிட்டாள்.
"நான் எப்படி இருக்கிறேன்?" என்று அலட்சிய மாகக் கேட்டான் மூர்த்தி.
”நமக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருஷங்கள் ஆகின்றன. ஒரு நாளாவது உங்கள் சம்பாத்தியத்திலிருந்து எனக்கு ஒரு புடவை வாங்கித் தந்திருக்கிறீர்களா ?”
"பூ! இதற்கென்ன பிரமாதம்! வாங்கினால் போச்சு! நீ என்னைக் கேட்கவில்லை. நானும் வாங்கித் தரவில்லை.
’அப்படியானால், எங்கெங்கோ இருப்பவர்களுக் கெல்லாம் பணம் அனுப்புகிறாரே, அவர்கள்