மாட்டாள். ஆகவே அதைப் பற்றி யாருமே கவனிக்கவில்லை. கணவனுடைய நடத்தை தெரிந்த பிறகு. அந்த உள்ளத்தில் அபரிமிதமான கசப்பு அவளிடத்தில் வளர்ந்து வந்தது. இருவரும் பேசுவதுகூட நின்று போயிற்று.
ஒரு தினம் ராதா வெளியில் செல்லுவதற்காக ஆடை அணிகள் அணிந்து கொள்ளத் தன் பீரோவைத் திறந்தாள். நகைப் பெட்டியைத் திறந்தபோது அதனுள்ளிருந்த ஒரு ஜோடி வைர வளையல்களைக் காண வில்லை. அந்த வளையல்கள் அவளுடையவை அல்ல. கல்யாணத்தன்று ஸ்ரீதரன் அவளுக்குக் கொடுத்தார். "ராதா! இவை நம் தாயினுடையவை. அவள் முகம் உனக்குத் தெரியாது. ஆகவே அவள் ஞாபகமாக வைத்துக் கொள்" என்றார். முகூர்த்தத்தன்று மாலை அவள் 'ரிஸப்ஷனு'க்குக் கிளம்பும்போது, அவள் கையில் வளையல் பெட்டியைக் கொடுத்துக் கொண்டே.
அந்தப் புராதன சொத்துதான் இப்போது மாயமாக மறைந்து விட்டது.
ராதாவின் உடல் வியர்த்தது. பரபரக்க பீரோ பூராவும் தேடினாள். அங்கிருந்த மேஜை பூராவும் குடைந்தாள். கணவனின் நிஜார் பைகளில் பார்த்தாள். அவனுடைய கோட்டுப் பைகளில் தேடினாள். ஆனால் அவள் தேடிய வஸ்து அகப்படாமல் வேறொரு வஸ்து அகப்பட்டது. அது ஒரு கடிதம்.
ஆங்கிலத்தில் முத்து முத்தான கையெழுத்துக்களில் ஒரு பெண் மூர்த்திக்குக் கடிதம் எழுதியிருந்தாள். அதில் மூர்த்தி நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வந்து போனவன் அவளை வந்து மணப்பதாகக் கூறிச் சென்றதாகவும் இதுவரையில் தகவல் தெரியாமல் போகவே, காரியாலயவிலாசத்துக்கு அவள் கடிதம் எழுதுவதாகவும் விரைவில் பம்பாய் வரும்படியும் அந்தப் பெண் எழுதி இருந்தாள். இல்லாவிடில், சீக்கிரமே தான் சென்னை வருவதாகக் குறிப்பிட்டு இருந்தாள். பெண்ணின் பெயர் தமயந்தி என்றிருந்தது.
இக்கடிதத்தை ராதா பார்ப்பதற்கு முதல் நாள் அவன் அணிந்து சென்றிருந்த கோட்டுப் பையில் ஒரு இன்ஷர் ரசீது காணப்பட்டது. தமயந்தி பெயருக்கு ஐந்நூறு ரூபாய்கள் அனுப்பியிருந்தான் மூர்த்தி. கடிதம் அதற்குப் பத்து தினங்கள் முந்திய தேதியுடன் வந்திருந்தது.
ராதாவின் கண்கள் கண்ணீரைப் பெருக்கவில்லை. காய்ப்புக் காய்த்துப் போன தசை மாதிரி