விஷயத்தைச் சொன்னாள்:
"நாங்க வாங்கிப் போட்ட இரண்டு கிரவுண்டு இடத்தில் எவனோ ஒருத்தன் மல்ட்டிப் பிளாட் கட்டியிருக்கான் சார். உண்ணாம தின்னாமல் சேமிச்சப் பணத்தில் வாங்கின நிலத்தை, எந்தப் பாவியோ வாயில போட்டுட்டான் சார்.''
அந்த இன்ஸ்பெக்டரும் உண்மையிலே கொதித்துப் போனார்.
“அடக்கடவுளே! எந்த இடத்தில கட்டினாங்க? கட்டின பயல் கையில விலங்கு போட்டு இழுத்திட்டு வாறேன். எந்த இடத்தில?”
"சிக்னல் பக்கத்துல சார்... பிள்ளையார் கோவில் இருக்கே அதுக்குக் கிழக்குப் பக்கம்..."
இன்ஸ்பெக்டர் முன்வைத்த மூளையை பின்வைத்தார். முன் யோசனையை பின் யோசனையாக்கினார். இதற்குள், எல் அண்டு ஓவும், அவரைப் பார்த்துக் கண்ணடித்தார். அது தேவையே இல்லை. இந்த கிரைம் இன்ஸ்பெக்டருக்கும் அதில் பிளாட் கட்டியது யார் என்று தெரியும். சரோசாவுக்கு அண்ணாத்தையான சாராய சக்ரவர்த்தி; அந்த பிளாட்டுக்கு கிரஹப்பிரவேசத்திற்கு இவரே போயிருக்கிறார். இப்போது பட்டும் படாமலும் பேசினார்:
"எதுக்கும் நாளைக்கு வாங்க. நான் கவர்மென்ட் லாயரை கன்செல்ட் பண்ணணும். இது சிவில் விவகாரம். கிரிமினல் விவகாரம் இல்ல. போலீசுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை. தாசில்தார் தீர்க்க வேண்டிய விவகாரம்.”
"தாசில்தாருக்கிட்டே போனேன் சார். அவரு போலீஸ் விவகாரம் என்கிறார். சார், எங்கள மாதிரி வெளி நகரத்தில் இருந்து தமிழ் மண்ணையே நேசிச்ச ஆட்களுக்கு நீங்கதான் சார் ஆதரவு கொடுக்கணும்; நீங்கதான் சார் காப்பாற்றணும்.”
"நீங்க சொல்றது சரிதான். அதேசமயம் ‘மல்டிப் பிளாட்' கட்டுறவர், எம் எம் டி யே அப்ரூவல் வாங்கித்தான் கட்டுவார். அந்த அப்ரூவல், பட்டா இல்லாமல் கிடைக்காது. அதனால்தான் தாசில்தாருக்கிட்டே போகச் சொல்லுறேன்.”