மடக்குறது என்ன நியாயம்? நீ அந்தப் பெரியவங்கள அப்படி விரட்டி இருக்கக் கூடாது!"
"என்னப்பா நீ, பிரச்சினை உன் சம்பந்தப்பட்டது இல்லை என்கிறதால, சிந்தித்துப் பார்க்கவே மறுக்கிறீயே. நம்ம போலீஸ் கமிஷனரால கூட அவனை ஒன்றும் பண்ண முடியாது. அரசாங்கமே அவன் பையில இருக்குது. செல்லாக் கோபத்தை பொறுமையா காட்டிக்க வேண்டியதுதான். அப்படி அடக்கி வைக்கிற கோபம் ஏலாத ஆசாமிங்கக்கிட்ட பாயுது. சப்ரெஜிஸ்டிராரும் சாராயக்காரன் பெயரில் ஒரு போலிப் பத்திரத்தை பதிஞ்சிருக்கான். தாசில்தாரும் பட்டாக் கொடுத்திருக்கான். நாம என்ன செய்ய முடியும்? நாளைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினால், அதை விசாரிக்கப் போறதே இந்த தாசில்தார்தான். யார் நிலத்தையும் யாரும் அபகரிக்கலாம் என்பது மாதிரி ஆகிப்போச்சு."
"போகிற போக்கைப் பார்த்தால் நம்ம யூனிபாரத்தைத் திருடி எவனாவது அதை உடுத்திக்கிட்டு நம்ம நாற்காலியில் வந்தே உட்கார்ந்து, தான்தான் இன்ஸ்பெக்டர் என்று சொல்லிவிடலாம்; அப்பமும் நம்மால ஒன்றும் செய்ய முடியாது."
இரண்டு இன்ஸ்பெக்டர்களும் ஒருவரையொருவர் இயலாமையில் பார்த்தார்கள். அதே சமயம் கிரைம் இன்ஸ்பெக்டர் சிந்தித்தார். திடீர் என்று மார்க் டிவைன் என்ற அமெரிக்க எழுத்தாளர் பெண்களுக்கு 'உபதேசித்தது' நினைவுக்கு வந்தது. 'கற்பழிப்பை எதிர்க்க முடியாவிட்டால், அதை ரசித்து அனுபவி.."
இன்ஸ்பெக்டர், சாராய சக்ரவர்த்திக்கு டெலிபோன் செய்து, அவரது மல்ட்டிப் பிளாட் கட்டிடத்திற்கு வந்த ஆபத்தையும் அதைத் தாம் முறியடித்ததையும் சொல்லப் போனார். டெலிபோன் அருகே போனவர் திடுக்கிட்டார். எதைச் சொல்லப் போனாரோ அதை அந்த எல் அண்டு ஓ இன்ஸ்பெக்டரே சாராய சக்ரவர்த்தி 'பி.ஏ.'விடம் ‘அய்யா அய்யா' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
வாழ்க்கையே வெறுத்தப் போன கிரைம் இன்ஸ்பெக்டர், படிகளில் இறங்காமல் அந்த அறையிலிருந்து கீழ்த்தரைக்குக் குதிக்கப் போனபோது, மேஜையில் இருந்த ரேடியோ மைக் அலறியது. எடுத்தார்.