(Reading time: 18 - 36 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

ரவி..." - எங்கே வலது கையில் பிரம்பு அடி விழுமோ என்று கூட சந்தேகமாயிருந்தது ரவிக்கு. ஆனால் நடந்த்தென்னமோ முற்றிலும் வேறானதாயிருந்தது.

  

அப்போது தான் கடைந்த பசு வெண்ணெயில் வெல்லச் சர்க்கரையைக் கலந்து, உருட்டி, "சாப்பிடுடா. உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே" - என்று ரவியின் வலது கையை நீட்டச் சொல்லித் தூக்கி இடித்து விடாமல் கவனமாகத் தள்ளி நின்று கொண்டு போட்டாள் அவன் அம்மா.

  

எந்த வயதிலும் எந்தச் சூழலிலும் எவர் முன்னிலையிலும் தான் பெற்ற பிள்ளையைச் சுலபமாக மறுபடி பச்சைக் குழந்தையாக மாற்றி விட முடிகிற வித்தையை ஒரு தாயினால் தான் செய்ய முடியும். அறிவு, ஆணவம், புகழ், மேதாகர்வம், மூப்பு முதலிய எல்லாப் போர்வைகளும் கழன்று விழச் செய்து தன் மக்களைத் தன் முன் குழந்தையாக்கி விடும் ஆற்றல் தாய்க்கு இருந்தது.

  

எங்கோ கண் காணாத சீமையில் மிகவும் புகழ் பெற்ற புரொஃபஸராக இருக்கும் வயது வந்த தன் மகனை அரை நொடியில் ஆடையணியாத பருவத்து வெள்ளி அரை ஞாணும் தாயத்தும் கட்டிய சிறு பாலகனாக மாற்றி விட்டாள் காமாட்சியம்மாள்.

  

தன் அம்மா கொடுத்த சுவையான பசுவெண்ணெயை விழுங்கி விட்டு, "கையை நீட்டுடான்னதும் எங்கே பிரம்படி குடுத்துடப் போறியோன்னு பயந்துட்டேன்ம்மா!" என்றான் ரவி.

  

"பிரம்பாலே இல்லேடா, நீ பண்ணியிருக்கிற காரியத்துக்கு உன்னை உலக்கையாலேயே மொத்தணும் போல இருக்கு." -

  

சரிசமமான அளவில் பிரியமும் கோபமும் கலந்த குரலில் இந்தக் கடிந்துரை இருந்தது. இதற்கு ரவி ஏதோ பதில் சொல்லத் தொடங்கிச் சொல்லுவதற்குள் வாசலில் பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டியின் குரல் கேட்டது. பாட்டி காமாட்சியம்மாளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்து விட்டாள். அம்மா உள்ளே சமையல் காரியமாக இருந்ததாலும், பாட்டி தேடி வந்து விட்டதாலும், மாடிக்குப் போகலாம் என்று திரும்பினான் ரவி. ஆனால் பாட்டி பிடித்துக் கொண்டாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.