இன்னும் அதிகார பூர்வமாகச் சொல்லவில்லை. அம்மாவாகக் கமலியைப் பற்றிச் சந்தேகப்படுகிறாள்; அவ்வளவுதான்.
நீராடி மடியாடை உடுத்துச் சுத்தமாக இருந்தாலொழிய அந்த வீட்டில் யாரும் பூஜையறைக்குள் நுழையக் கூடாது.
"முதல்லே இந்த வீட்டுக்குள்ளேயே ஒரு ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தியாகணும் அம்மா" என்று முன்பு தன் கல்லூரிப் படிப்பு நாட்களில் அம்மாவிடம் கேலியாகப் பலமுறை சொல்லியிருக்கிறான் ரவி.
பூஜையறையைப் பொறுத்துக் கமலியை அம்மா எப்படி நடத்துவாளோ என்று பயந்தான் அவன். அதனால் கமலிக்காக அவனும் வெளியிலேயே நின்று கொண்டான். கமலியின் கையில்லாத நாகரிக 'ரவிக்'கை அம்மாவும் அப்பாவும் வெறித்து வெறித்துப் பார்த்தார்கள். அம்மா ஒரு தடவை அவன் மட்டுமே கவனிக்கிற சமயத்தில் முகத்தைக் கோணிக் கொண்டு தோள்பட்டையில் இடித்து அழகுகூடக் காட்டினாள். நல்ல வேளையாக அப்போது கமலி பார்வதியின் பக்கம் திரும்பி அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக பூஜை முடிந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு பூஜையறைக்கு முன்னாலிருந்து கலைந்தார்கள் அவர்கள். அப்போது வசந்தி திரும்பி வந்து விட்டாள். அப்பாதான் முதலில் அவனிடம் அதைக் கேட்டார்.
"சாப்பாடு மேலேயே அனுப்பச் சொல்லட்டுமா அல்லது இங்கேயே இலை போட்டுப் பரிமாறலாமா?"
கமலி எல்லோரோடும் சேர்ந்து இலையிலேயே சாப்பிடத் தயாராக இருந்தாள். பரிமாறுவதில் காமாட்சியம்மாளுக்கு உதவி விட்டு மற்றவர்கள் சாப்பிட்டபின் சாப்பிடவும் கூட அவளுக்கு ஆவலாயிருந்தது. அம்மா கமலியைச் சமையலறைக்குள்ளேயே நுழைய விடாவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் ரவியும் வசந்தியும் தான் துணிந்து கீழே இலை போட்டுச் சாப்பிடும் திட்டத்தை மாற்றினார்கள்.
"மாமாவும் மாமியும் இங்கே சாப்பிடட்டும். நீ, கமலி, பார்வதி, குமார் எல்லாருமே நிதானமாகச்