வழியே நடந்து போய்ப் பரம வைதிகனாகிய தான் ராகு காலத்தில் திறந்து வைக்கப்படும் ஒரு கடைத் திறப்பு விழாவுக்கு விஜயம் செய்வது என்பதை நினைத்துப் பார்ப்பதிலேயே அவருக்கு ஆயிரம் தயக்கங்கள் இருந்தன.
தயக்கங்கள் எல்லாம் ஊராரையும் சீமாவையரையும் எதிரிகளையும் நினைத்துத்தான். தனிப்பட்ட முறையில் நினைக்கும்போது எந்தக் குழப்பமும் தயக்கமும் இல்லாமல் தேசிகாமணியின் மருமகனுக்காகத் திறக்கப்படும் பலசரக்குக் கடைத் திறப்பு விழாவுக்குப் போய் விட்டு வரவேண்டும் என்றுதான் தோன்றியது. 'நல்ல வேளை பார்த்துத் தொடங்குவதும் ராகுகாலத்தில் தொடங்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. நாம் நிர்ப்பந்தப் படுத்த முடியாது. அதே போல் வாடகைக்குப் பேசி எடுத்துக் கொண்ட ஓர் இடத்தில் வாடகைக்கு இருப்பவருக்கு விருப்பமான எந்தப் படத்தையும் அவர் தாராளமாக மாட்டிக் கொள்ள உரிமை உண்டு. அதில் நாம் தலையிடமுடியாது' என்றே சரியாக நினைத்து மதிப்பிட்டார் அவர்.
"நீங்களெல்லாம் கையால் நியாயத்தைத் தொழுது கொண்டே மனத்தால் அநியாயத்துக்குப் பயப்படுகிறீர்கள்"... என்று மகன் சொல்லிக் குத்திக் காட்டிய பின்பே உடனடியாக அவனோடு போவதற்குச் சர்மா இசைந்திருந்தார். உடை மாற்றிக் கொண்டு கமலியையும் அழைத்து வர மாடிக்குப் போயிருந்தான் ரவி.
ரவியும், கமலியும் மாடியிலிருந்து கீழே வருவதற்குள் உள்ளே போய் காமாட்சியம்மாளிடம் தாம் வெளியே புறப்படப் போவதாக ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு வந்தார் சர்மா.
அவர் முதலில் நினைத்தபடிதான் நடந்தது. சர்மாவும் ரவியும், கமலியும் தெருவில் சேர்ந்து நடந்து போவதை ஒரு விநோதமான புது ஊர்வலத்தைப் பார்ப்பது போலத்தான் பார்த்தார்கள். தெருக்களின் அத்தனை வீடுகளும், ஜன்னல்கள், வாசல்கள், திண்ணைகளைத் திறந்து வைத்துக் கொண்டு அதற்காகவே காத்திருந்த மாதிரி நடந்து கொண்டன.
எதிரே ஊர்ப் புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி வந்தார். சர்மாவையும், ரவியையும் விசாரித்தார். கமலியைப் பார்த்துவிட்டுச் சர்மாவிடமே மறுபடியும் "அவா யாரு? புதுசா இருக்கே?" என்று கேட்டார் சாஸ்திரி.
"பிரான்ஸிலேருந்து வந்திருக்கா. நம்ம தேசம், கலாச்சாரம், பழக்க வழக்கம்லாம் பத்திப் படிச்சு