ரவியும், குமாரும், பார்வதியும் தான் சங்கரமங்கலத்திலிருந்தார்கள். காமாட்சியம்மாள் வீட்டுப் பொறுப்பைப் பார்வதியிடம் விட்டிருந்தாள். மடிக் குறைவாகச் சமையலறையை உபயோகப் படுத்தாமல் கூடத்து மேடையிலேயே எல்லாம் செய்து முடித்துக் கொள்ள வேண்டும் என்று பாருவிடம் புறப்படுவதற்குமுன் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள் காமாட்சியம்மாள்.
சர்மாவும், காமாட்சியம்மாளும் புறப்பட்டுப் போன மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ - யாரும் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று அந்த வீட்டில் நடந்து பொருள் சேதமும் மிகுந்த மனக் கஷ்டமும் உண்டாக்கியது. திட்டமிட்டு உண்டாக்கிய நஷ்டம்தான் - யார் அதைச் செய்திருக்கலாம் என்பதும்கூடப் புரிந்தது. ஆனால் நேரடியாக அந்த ஆள் மட்டும் அகப்படவேயில்லை. வீட்டுப் பின்புறம் தோட்டத்திற்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் நடுவே ஒரு பெரிய வைக்கோற் படைப்பு இருந்தது. அதிகாலை மூன்று மணி சுமாருக்கு யாரோ அதற்கு நெருப்பு வைத்து விட்டு ஓடியிருந்தார்கள். நெருப்புப் பற்றும் போதும் யாரும் அதைப் பார்க்க நேரவில்லை.
எல்லாரும் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம். பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி கொல்லைப் பக்கம் எழுந்திருந்து போனவள் தான் முதலில் தீ எரிவதைப் பார்த்து விட்டுக் கூப்பாடு போட்டாள்; பாட்டி பார்த்ததே சிறிது தாமதமாகத்தான். அதற்குள் காற்று வாக்கில் அது மாட்டுத் தொழுவத்திற்கும் பரவி விட்டது. மாடியிலிருந்த ரவியும், கமலியும், கீழ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பார்வதியும் குமாரும் எழுந்து போவதற்குள் அக்கம் பக்கத்தார் ஓடிவந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துத் தீயை அணைக்கத் தொடங்கியிருந்தார்கள். காற்று வேறு இருந்ததால் தீ சுலபத்தில் அணைவதாக இல்லை. மாட்டுத் தொழுவம் மேற்கூரை இடிந்து விழுந்து அப்படியே அமுக்கி விட்டதன் காரணமாகக் கட்டாமல் விடப்பட்டிருந்த இரண்டொரு கன்றுக் குட்டிகளைத் தவிர மற்றவை உள்ளேயே தீயிலிருந்து வெளியேற முடியாமல் தீனமாகக் கதறிக் கொண்டிருந்தன. பெரிய வைகோற் படைப் பாகையினால் அனல் வீட்டு முற்றம் வரை தகித்தது. வீட்டுக் கொல்லைப்புற நிலைப் படிக்கும் முற்றத்துக்கும் நடுவிலிருந்த துளசிச் செடியின் ஒரு பகுதி வாடிக் கருகி விட்டது. மாட்டுத் தொழுவம் மட்டும் அப்படியே அமுங்காமல் பக்க வாட்டில் சரிந்திருந்தால் துளசி மாடத்தின் மேலேயே அது சாய்ந்திருக்கும்.
பத்துப் பன்னிரண்டு பேர் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கவும், வாளியில் வாங்கி எரியும்