ரவியும், இறைமுடிமணியும் சீமாவையர் மேல் சந்தேகப்பட்டார்கள். எல்லாரையும் போல் சீமாவையரும் நன்றாக விடிந்தபின் ரவியிடம் வந்து துக்கம் கேட்டு விட்டு, "என்ன தெய்வக் குத்தமோ தெரியலே - இல்லேன்னா பிராம்மணன் வீட்டிலே பசுமாடும் துளசிச் செடியும் தீப்பிடிச்சு எரியுமோ?" - என்று உருகிப் புலம்பினார். சீமாவையரின் இந்த வார்த்தைகளில் இருந்த குறும்பும் - இந்த நிகழ்ச்சியைப் பற்றி இனிமேல் அவரும் அவருடைய கையாட்களும் எப்படிப் பிரச்சாரம் செய்வார்கள் என்பதும் சேர்ந்தே தெரிந்தன. ரவி அவரிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அவராக வந்தார் - பேசினார், போனார். தாம் வந்து கேட்கவில்லை என்று ஆகிவிடக்கூடாதே என்பதற்காகவே வந்து தலையைக் காட்டி விட்டுப் போன 'அலிபி' மாதிரி இருந்தது அவரது வரவு.
ரவி சந்தேகப்பட்டது போலத்தான் நடந்தது. அடுத்த இரண்டு மூன்று தினங்களில் "மடத்துச் சொத்தை நாஸ்திகனுக்கு வாடகைக்கு விட்டார். வீட்டிலே ஆசாரக் குறைவான மனுஷாளைச் சேர்த்துண்டார், தெய்வத்துக்கே பொறுக்கலே தீப்பிடிச்சுது" என்கிற பாணியில் சீமாவையர் அக்கிரகாரம் முழுவதும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார். சிலரிடம் அந்தப் பிரச்சாரம் நன்கு எடுபடவும் செய்தது.
காமாட்சியம்மாள் கிளம்பிப் போன பின் ஒருநாள் கூட விட்டுப் போகாமல் அதிகாலையில் நீராடிச் சிரமப்பட்டுப் பதினெட்டு முழம் புடவையை மடிசார் வைத்துக் கட்டிக் கொண்டு கோபூஜையும், துளசி பூஜையும் செய்து வந்த கமலி தீப்பிடித்த தினத்தன்று பூஜை செய்வதற்குப் பசு இல்லாமல் திக்பிரமை பிடித்தது போல் இருந்தாள். நல்ல வேளையாகத் துளசி ஒரு பக்கம் பட்டுப் போயிருந்தாலும் மறுபகுதியிலும் அடிப்பக்கமும் தளிர்த்து விடும் என்பதற்கு அடையாளமான பசுமை இருந்தது. தீப்பிடித்த தினத்தன்றும் அவள் துளசி பூஜையை நிறுத்த வில்லை.
இந்த அசம்பாவிதம் நடந்த இரண்டு நாட்களில் சர்மாவும், காமாட்சியம்மாளும் ஊர் திரும்பியிருந்தனர். இது தெரிந்ததும் சர்மா ஓரிரு கணங்கள் ஒன்றும் பேசாமல் இருந்தார். அப்புறம் அப்படி ஒன்று நடந்ததை மறந்தது போல் சகஜமாக இருக்கத் தொடங்கி விட்டார் அவர். அப்பாவின் இந்த இயல்பை ரவி ஒரு பழைய இதிகாச நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு நினைத்தான்.