புலம்பினாள்.
மல்லிகா விக்கித்து நின்றாள். கல்லாகி, மீண்டும் பெண்ணான அகலிகை, உடனே கல்லானது போல, குளிர்ச்சியை விரும்புவளை, கொட்டும் உறைபனிக் காலத்தில் பனிக்கட்டிக்குள் போட்டதுபோல், மலர்க்காடு பிணக்காடாய் ஆனது போல், துவண்டு நின்றாள். “மல்லிகா மல்லிகான்னுதான் புலம்புகிறாராம்” என்று அம்மா சொன்ன வார்த்தைகள், மலைப்பாம்பாய் மாறி, அவளை விழுங்கிக் கொண்டிருந்தது. புலியாய் மாறி, அவள் மீது பாய்ந்து கொண்டிருந்தது.
மல்லிகா, சரவணனை ஏறிட்டுப் பார்த்தாள், கேட்டாள்: “சைக்கிளில் தானே வந்தீங்க...”
“இல்ல, ஸ்கூட்டரில்...”
“என்னை ஸ்கூட்டரில் கொண்டு விட முடியுமா?”
சரவணன், செல்லம்மாவைப் பார்த்தான். அவள், அந்தச் சமயத்திலும், ஊர் வாய்க்குப் பயந்தவளாய் “நாம ரெண்டு பேரும் போகலாம் மல்லிகா” என்றாள்.
மல்லிகா, வெறி பிடித்தவள் போல் கத்தினாள்.
“என்னால்... ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது சரவணன்! உங்களால் என்னைக் கொண்டு போய் விட முடியுமா... முடியாதா... இவ்வளவுதானா நீங்கள்...”
மல்லிகா, வெளியே ஓடினாள். எந்தக் கால்களைப் பிடித்து, தத்தித்தத்தி நடந்தாளோ, அந்தக் கால்களைப் பிடித்துக் கதற வேண்டும். பெறாமலே பெற்று, கண்படும் என்று கட்டுப்படுத்தியும், கட்டுப்படுத்தினால் துவள்வாள் என்று விட்டுப் பிடித்தும், உயிரிலும் உயிராய் வளர்த்த அப்பாவை, உடனே பார்த்தாக வேண்டும்.
மல்லிகா, தலைவிரி கோலமாக ஓடிக் கொண்டிருந்தாள். அருகே வேகமாக வந்து நின்ற சரவணன் ஸ்கூட்டரைப் பாராமலே ஓடினாள். பிறகு அந்த ஸ்கூட்டர் சற்று முந்திப் போய், வழிமறிப்பது போல் நின்ற போது, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவன் தோளைப்