பிடித்துக் கொண்டாள். ஆனால், அதில் எந்தவித ஸ்பரிசமும் ஏற்படவில்லை. முதன் முதலாக, கண்ணெல்லாம் நிறைந்தவன் மேல் கைபட்ட நாணம் இல்லை. ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கூட்டருக்கு முன்னால், சொக்கலிங்கம் நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை. இதனால் “பார்த்து... பார்த்து” என்றாள். சொக்கலிங்கம், அந்த ஸ்கூட்டருக்கு முன்னாலேயே ஓடுவது போன்ற இன்னொரு பிரமை இதனால் “சீக்கிரம் சீக்கிரம்” என்றாள்.
சொக்கலிங்கத்தின் கால் பக்கம், பார்வதி சோகமாக உட்கார்ந்திருந்தாள். “எதுக்கும் ஒரு உயில் எழுதி வச்சிடுங்க” என்று மைத்துனன்மார்கள், சுற்றி நின்று உபதேசம் செய்து விட்டு, பார்வதியைக் கூட்டிக் கொண்டு வெளியே எங்கேயோ போயிருந்தார்கள். வாசலில் வழி மறிக்கப் பார்த்த நர்சை தள்ளி விட்டுவிட்டு மல்லிகா உள்ளே ஓடினாள்.
“அப்பா... அப்பா... என் அப்பா!”
மல்லிகா, அப்பாவின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டே விம்மினாள். அவர் காலில் தலை வைத்துப் புரண்டாள். கன்னத்தைத் தடவி விட்டுக் கதறினாள்.
“அப்பா... அப்பா... என் அப்பா!”
மேகத்தைக் கீறிய இடியைப் போல், இடியைக் கீறிய மின்னலைப் போல், மின்னலைக் கீறிய ஒளியைப் போல், அவள் தன்னைக் கீறி, தன் இதயத்தையே வெளியே எடுத்து வைப்பவள் போல், “அப்பா... அப்பா...” என்றாள்.
சொக்கலிங்கம் மல்லிகாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். “வந்திட்டியாம்மா... வந்திட்டியாம்மா” என்று அவரது வாய், வார்த்தைகளைத் தோற்றுவித்த போது, அவர் “என்னை விட்டுட்டு... உன்னால் எப்படிம்மா இருக்க முடிஞ்சுது? என்னால் முடியல... அதனாலதான் இந்த கதி” என்று அவர் அடம்பிடிக்கும் சிறுவனைப் போல் கோபமில்லாதக் கோபத்துடன், மிஞ்சுவது போல் கெஞ்சியும், கெஞ்சுவது போல் மிஞ்சியும் எழுந்து உட்கார்ந்தார். கட்டில் விளிம்பில் சாயப் போன அவரை, மல்லிகா தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.