Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 11 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
மாதவராயருடைய மாளிகை.
அக்னி வளர்க்கப் பட்டு இருக்கிறது.
அதற்கு அருகில் மஞ்சள் புடவை உடுத்திக் கொண்டு கோகிலம் நிற்கிறாள். குழந்தை சிசுபாலன் அவளுடைய இடுப்புப் புடவையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். ஸோமேசன் வேறொரு புறமாக நிற்கிறான்.
கோகி : அப்பா! கண்ணே! என்னை விட்டு விடு! நான் சொல்வதைக் கேள். உன் பிதாவுக்கு இவ்வளவு மான ஹானி வந்தபின் நான் இந்த உடம்பை வைத்திருக்கக் கூடாது. வீணாய்த் தடுக்காதே.
சிசு : அம்மா! அப்பாவும் போய் விட்டார். நீங்களும் நெருப்பில் விழுந்து விட்டால் நான் என்ன செய்வேன்? இனி நான் யாரை அம்மாவென்று கூப்பிடுவேன்? நீங்கள் இல்லாமல் நான் எப்படி உயிரோடு இருப்பேன்? என்னை இனிமேல் தினம் யார் கூப்பிட்டு, ஆகாரம் பட்சணம் எல்லாம் கொடுப்பார்கள்! அம்மா! நீங்கள் நெருப்பில் விழக்கூடாது.
ஸோ : அம்மணி! பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியம் பாவத்தைத் தரும். பிராம்மணனுடைய மனைவி தனிக்காஷ்டம் ஏறுவது தவறு என்று நம்முடைய சாஸ்திரங்கள் முறையிடுகின்றன.
கோகி : என்னுடைய நாதனுக்கு வந்த பழிச் சொல்லை கேட்பதைவிட நான் இந்த பாவத்தைச் செய்வதே உத்தமமானது. என்னுடைய குழந்தையை மாத்திரம் தயவு செய்து நீர் அப்பால் அழைத்துக் கொண்டு போம். இவன் என்னைத் தடுக்கிறான்.
ஸோ : அம்மணி! மன்னிக்க வேண்டும். நீங்கள் உயிரை விடத் தீர்மானித்தால், முதலில் நான் விழுவதற்கு அனுமதி தாருங்கள்.
சிசு : அம்மா! நான் முதலில் விழுந்து விடுகிறேன். எல்லாரும் என்னைத் தனியாக இங்கே விட்டுப் போகப் பார்க்கிறீர்களோ?