கோகி : கண்மணி குழந்தாய்! பிடிவாதம் செய்யாதே, நான் சொல்வதைக் கேள். இறந்து போன உன் பிதாவுக்கும், எனக்கும் நீ உயிருடனிருந்து கவனிக்க வேண்டிய கிரியைகள் எவ்வளவோ இருக்கின்றன. நீ இருந்து அவைகளைச் செய்யா விட்டால், எங்களுக்கு நல்ல கதி கிடைக்காது. என் தங்கமே! போ! அப்பால்! நான் சொல்வதைக் கேள்.
(மாதவராயர் முதலிலும் வஸந்தஸேனை, சந்தானகன், கோமளா முதலியோர் பின்னாலும் ஓடி வருகிறார்கள்.)
மாத : (தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார்) அப்பா கண்ணே! உன்னைத் திரும்பவும் காணக் கிடைத்ததே!
கோகி : ஆஹா! இவர் யார்? அவர்தானே! (உற்றுப் பார்த்து)ஆம், அவரே! என் ஆருயிர்க் கணவரே வந்து விட்டார்.
குழந்தை : (சந்தோஷத்தோடு) அம்மா! இதோ பார் அப்பா வந்து விட்டார். இனிமேல் அழாதே! சந்தோஷமாயிரு!
மாத : (தன் மனைவியை அணைத்துக் கொண்டு) பிரிய சுந்தரி கோகிலம் உன் நாதன் உயிருடன் இருக்கும் பொழுது, நீ உயிரைவிட நினைத்தாயே! என்ன பைத்தியம்! சூரியன் ஆகாயத்தில் பிரகாசிக்கும் வரையில் தாமரைப் புஷ்பம் தன் இதழ்களை மூடுவது உண்டோ?
கோகி : சூரியனைக் கிரஹணம் பிடித்தமையால் அவனை இனிக் காண முடியாது என்னும் எண்ணத்தினால் தாமரை தன் இதழ்களை மூடப்பார்த்தது; அதற்குள் நல்ல காலமாய்க் கிரஹணம் நீங்கியது; இனி அதன் வாட்டமும் ஒழிந்தது.
ஸோமே : இதென்ன கனவோ! என் கண்கள் நிஜமாகவே பார்க்கின்றனவோ! என் ஆப்த நண்பர்தாமோ இவர்! மேன்மை பொருந்திய மனைவியின் பதிவிரதா தர்மம் தலை காத்ததோ? இவள் நெருப்பில் விழ நினைத்ததே இவளைத் தன் புருஷ னுடன் சேர்ப்பித்ததோ! ஆகா!