Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 28 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 28
ரயில், தாலாட்டாய் ஓடியது... தடா தடாவாய் ஓடியது. அதன் சத்தத்தைப் பலர் தங்களின் மனோபாவத்திற்கு ஏற்ப ஒலியமைத்துக் கொள்ளலாம், ‘போறேனே... போறேனோ' என்றோ, ‘அய்யாவே... அம்மாவே’ என்றோ.
விஜயவாடாவுக்கு ரயில் வந்தபோது டிக்கெட் இன்ஸ்பெக்டர் தலையைக் காட்டினார். அங்கே நின்ற மானுட மீறல்களையும், கழிவுகளையும் கீழே தள்ளி விட்டார். சுயம்புவின் முறை வந்ததும் நிமிர்ந்து பார்த்தார். ‘பாலயோகியோ... இந்த வயதிலேயே இப்படி ஒரு சந்நியாசமா... இப்படி ஒரு ஒளி மயமா...’
டிக்கெட் சோதகர் சுயம்புவைக் கையெடுத்துக் கும்பிட்டு வழிகாட்டினார். பயணிகள் பக்கம் வந்து ஒரு இடத்தைக் காட்டிப் பணிவோடு நின்றார். சுயம்பு அந்த இடத்தில் உட்கார்ந்து, அவரைப் பார்க்காமல் அப்படியே கண்களை மூடினான். அதையே ஒரு யோகமாகவும், இலவசப் பயணத்திற்கு அனுமதித்த தன்னைப் பற்றித்தான் அவர் தியானிக்கிறார் என்றும் சோதகர் நினைத்தார். சுயம்பு, தற்செயலாய் அவரைப்பார்த்து லேசாய் சிரித்தபோது, அதை ஆசீர்வாதமாகக் கொண்டார். மகான் தரிசனம், பாபவிமோசனம் லஞ்ச விசாரணையில் வெற்றி கிடைக்கும். சீனியர்களுக்கு முன்பாகவே புரமோஷன் கூட வரலாம்...!
அந்தப் பெட்டியில், ஒரு தமிழ்முகம் கூட இல்லை. அத்தனைபேரும் இந்திக்காரர்கள். ஏதோ, ஒரு மதச்சடங்கிற்காக ஒரு பெட்டியையே சட்டப்படி ‘வளைத்து’ப் போட்டிருந்தார்கள். டிக்கெட் சோதகர் திரும்பித் திரும்பி பார்த்துச் சென்ற சுவாமிஜியை, அவர்களும் பார்த்துக் கொண்டார்கள். பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; என்றாலும் சிறிதாகவும் நினைக்கவில்லை. அவ்வப்போது. சப்பாத்தி, பூரியை நீட்டினார்கள்.
அந்த ஜி.டி ரயில், இரவையும் பகலையும், உருட்டி விட்டு ஓடியது. இரண்டு இரவுகளையும், ஒரு பகலையும் கழித்துக்கட்டிவிட்டு, ஒருநாள் முழுவதும் ஓய்வெடுக்கப் போவதுபோல், காலையிலேயே புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்து நின்றது.
சுயம்புவுக்கு அந்த ரயில் நின்றதுசுட நினைவில்லை. சில மனிதர்களைக் கழித்துவிட்டு, சில