Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 27 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 27
சுயம்பு, ஆண் என்றோ, பெண்ணென்றோ தன்னை அடையாளம் காணாமலும் அடையாளப்படுத்திக் கொள்ளாமலும், ஏதோ ஒரு ‘பிறவி’ என்பது போல் நின்றான்.
இன்ஸ்பெக்டர், அவன் உடலனைத்தையும், தேடிப் பார்த்தார். ஜட்டியோடு மட்டுமிருந்தாலும், அந்தப் பார்வை தாங்கமாட்டாது சுயம்பு, தனது கைகளை எடுத்து குறுக்கே போட்டுக் கொண்டான். அவனை அடிப்புதற்காக எழுந்திருக்கப் போனவர், அவன் முகம் மாவுபோல் குழைந்திருப்பதையும், கண்கள், பார்வைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் இருப்பதைப் பார்த்துவிட்டு, சிறிது இறங்கினார், இரங்கினார். ஆனாலும் குரலில் எந்தக் குழைவையும் காட்டாமல் அதட்டினார்.
“ஒரு நாளைக்கு எவ்வளவுடா சம்பாதிக்கிறே. எத்தன பேருகிட்டடா...”
சுயம்பு, இரு கைகளையும் விரித்துக் காட்டினான்.
“நீ ஏதோ என்ஜினியரிங் காலேஜில படித்ததா பெரிய பொட்டை சொன்னான். எந்தக் காலேஜுடா... சொல்றியா. முதுகுத் தோலை உரிக்கணுமா?”
சுயம்பு பேசப் போவதில்லை என்பதாய் நின்றான்.
“போலீஸ் எதுக்கு இருக்குதுன்னு நெனச்சடா... ஒன்ன மாதிரி பொட்டங்களை இஷ்டத்துக்கு விட முடியுமா? சொல்றியா... இல்ல முட்டிக்கு முட்டி வாங்கணுமா...”
சுயம்பு, மார்பில் குறுக்காய்க் கிடந்த கைகளை எடுத்துக் கீழே போட்டு, முட்டிகளை இடுப்புப் பக்கமாக மறைத்துக்கொண்டான்.
“பொறுக்கிப் பயலே. மரியாதையா கேக்கிறதுக்கு பதில் சொல்லு. இல்ல. ஒன் கூட இருக்கிற பொட்டப் பயலுவ எல்லாரையும், இங்கே கூட்டிவந்து முட்டிக்கு முட்டி தட்டுவோம். ஒன் அம்மாவா... பச்சையம்மா. அந்தப் பயல தட்டுற தட்டுல அவள் தானாச் சொல்லிடுவாள்.