Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 26 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 26
மறுநாள், காலை ஒன்பது மணி.
இன்ஸ்பெக்டர், ரவுண்டுக்குப் புறப்படத் தயாரானார், ஜீப்பில் ஒயர்லெஸ் கருவி கத்தியது. அவர் மேஜையில் பொருத்தப்பட்ட மைக்கும் யார் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தது. சிலர் துப்பாக்கிகளை துடைத்துக் கொண்டிருந்தார்கள். போலீஸ் சித்திரகுப்தனான ரைட்டர் கேஸ் கட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர், ஒரு ஓரமாய் ஒடுங்கி நின்ற குருவக்காவை ஓரம்கட்டிப் பார்த்தபடியே “எஸ்...” என்று இழுத்தார்.
இரண்டு கான்ஸ்டபிள்கள், சலூட்டோடு, இரு வரிசைகளைக் கொண்டு வந்தார்கள். மகளிர் அணி ஒரு பக்கம். ஆண்கள் அணி மறுபக்கம். இதற்குள் ஒருத்தர், சுயம்புவையும், பச்சையம்மாவையும் விலங்கோடு கொண்டு வந்து மத்தியில் நிறுத்தினார். பாதி பேருடைய முகங்கள் வீங்கி இருந்தன. இமைகள் பெருத்துக் கண்களை மறைத்தன. குருவக்காவைத் தட்டுத் தடுமாறிப் பாதிப் பார்வையால் அடையாளம் கண்ட பச்சையம்மா, கதறினாள். கதறிய வாயில் ஒரு லத்தித் தட்டு. கப்சிப்.
இன்ஸ்பெக்டர், மகளிர் அணியை ரசனையோடு அனுப்பி வைத்தார். ஆண்கள் அணியில் ஒரே ஒருவரை மட்டும் நிறுத்திவிட்டு, மற்றவர்களை வெளியே அனுப்பினார். அவர்கள் போனதும் கைவிலங்கோடு நின்ற பச்சையம்மாவை உற்றுப்பார்த்து, ‘பாடம்’ நடத்தினார்.
“ஒன் பேர்ல இன்னிக்கு மாற்றமில்ல... பச்சையம்மாதான்... அதோ நிக்கான் பாரு... பிச்சுமணி... அவன் கொடுத்த கால் கிலோ கஞ்சாவை காலேஜ் பக்கமா கொண்டு போகப் போனே... அதுக்காக அவன்கிட்ட முந்நூறு ரூபாயும் அட்வான்ஸா வாங்கிட்டே... அதுக்குள்ள... நானும் அந்தக் கான்ஸ்டபிளும் கஞ்சா கை மாறுனபோது வெடுக்குன்னு பிடிச்சிட்டோம்... நல்லா ஞாபகம் வச்சுக்க. கோர்ட்ல சொல்லும்போது மாற்றிச் சொல்லிடாதே, அப்புறம் லத்தி பிஞ்சுடும்.”