“ஒனக்காக என்ன வேணுமுன்னாலும் செய்வேன். ஆனால், இவள விடப்போறதாய் இல்ல...”
“பொறுக்கிப் பயல்க எங்களை கத்தியக் காட்டி பணம் பறிக்காங்கன்னு ஒங்ககிட்ட எத்தனையோ தடவை எழுதிக் கொடுத்தோம். எழுதிக் கொடுத்ததைத்தான் கிழிச்சுப் போட்டிங்க. இதையாவது கேளுங்க சார். பங்களா விபச்சாரத்துக்கும், பப்ளிக் விபச்சாரத்துக்கும் என்ன சார் வித்தியாசம்... எங்கள மட்டும் ஏன் சார் இந்தப் பாடுபடுத்துறீங்க! போலீஸ் உறவும் பனைமரத்து நிழலும் ஒண்ணுன்னு சொல்றது சரியாப்போச்சே சார்!”
“இந்தாய்யா டேவிட்... இவளயும் உள்ள தள்ளு... ஏண்டா பொட்டப் பயலே. எல்லாப் பொட்டைகளும் சொல்றதுமாதிரி நானும் ஒன்னை குருவக்கான்னு மரியாதையாய் பேசுறேன்... ‘அய்யோ பாவமுன்னு’ பார்த்தால் அதிகப்பிரசங்கித்தனமா செய்யுறே. இந்தாப்பா டேவிட்!”
எங்கிருந்தோ ஓடிவந்த கான்ஸ்டபிள் டேவிட், இன்ஸ்பெக்டருக்கு முதலில் சலூட்டை அடிப்பதா, அல்லது குருவக்காவை அடிப்பதா என்று யோசித்தார். ஆனாலும், சலூட்டைவிட, அடிப்பதில் ஒரு சந்தோஷம் கிடைக்கும் என்பதால் குருவக்காவின் பிடறியில் ஒன்று போட்டார். இன்ஸ்பெக்டர் அதற்குமேல் அடிக்காமல் தடுத்து விட்டார். பிறகு வெட்டொன்று துண்டொன்றாய் பேசினார்.
“நீ தலைகீழ நின்னாலும் கஞ்சா கஞ்சாதான். கடத்துனது பச்சையம்மாதான்...”
குருவக்கா, விரக்தியுடனும், வெறுமையுடனும் கேட்டாள்.
“அபராதம் எவ்வளவு சார் போடுவாங்க...”
“அப்படிக் கேளு. புத்திசாலி. ஐநூறு ரூபாய்க்குக் குறையாது... இல்லாவிட்டால், ஒரு மாதம்.”
குருவக்கா, பச்சையம்மர்வைப் பார்த்தாள். அதில் பாதிக் குற்றப்பார்வை. பச்சையம்மா புலம்பினாள்.
“ஒன் பேச்சைக் கேட்காதது தப்புத்தாங்கா... டிரங் பெட்டிக்குள்ள பேப்பர் மடிப்புக்குக் கீழே