(Reading time: 8 - 15 minutes)
Vata malli
Vata malli

  

சுயம்பு, தானே தன்னைக் கைது செய்துகொண்டு போவது போல் போனான். பின் பக்கமாகப் போனான். எவரோ ஒருத்தர் மப்டியில் வந்தார். போலிஸோ... கிரிமினலோ... அவனுக்கும், தனக்கும், டீயும் பன்னும் வாங்கிவரச் சொன்னார். இதற்காகவே ஓரங்கட்டியிருந்த லாக்கப்பிலிருந்து ஒருவரை பத்து நிமிடத்திற்கு ‘தேநீர் ஜாமீனில்’ விடுவித்தார்.

  

அந்தக் காவல் நிலையத்தில் கொல்லைப்புறத்தில் போடப்பட்ட பெஞ்சில் உட்கார்ந்து பன்னைக் கடித்து தேநீரை உறிஞ்சிவிட்டு, சுயம்பு அந்த பெஞ்சிலேயே முடங்கினான். அங்குமிங்குமாய், போலீஸ் நடமாட்டம். ஒரு பெட்சீட் வந்தது. ‘இன்ஸ்பெக்டரின் அண்டை ஊர்க்காரனுக்கு, இதுகூடச் செய்யாவிட்டால் எப்படி... அநேகமா சொந்தக்காரனா இருக்கணும்... இன்ஸ்பெக்டர், கெளரவத்துக்காக மறைக்கான்...’

  

சுயம்பு, திடீரென்று ‘எக்கா’ என்று சொல்லி, வீறிட்டு எழுந்தான். தூக்கம் கலைந்து, துக்கம் வந்தது. அந்த அக்காவிடம் தன்னை அழைத்துப் போகிறார்கள் என்பதில் ஒரு சந்தோஷம். ஆனாலும் அந்த சந்தோஷத்தை அடுத்த நிமிடத்தில் ஒரு சந்தேகம் துரத்தியது. ‘எதுக்குப் போகணும்? இனிமேல் அக்காவுக்கு நடக்கப்போற கலியாணத்தை தடுக்கவா... என் காதலைக் கெடுத்திட்டியேன்னு தங்கச்சிகிட்ட திட்டு வாங்கவா... அம்மாவ, ஒரு பாவமும் அறியாத என் அம்மாவ பழையபடியும் திட்டவா? இதுல்லாம் கெடக்கட்டும். முகவரியோட பணம் அனுப்பி வெச்சேன்... மூஞ்சியில் அடித்தது மாதிரி திருப்பி அனுப்பிட்டாங்க. அது என் வீடுல்ல... நான் இன்னும் அக்காவுக்கு தம்பி, பெத்தவங்களுக்கு பிள்ளை. ஆனால் தம்பிக்கு அக்கா இல்ல. பிள்ளைக்கு பெத்தவங்களும் இல்ல...

  

சுயம்பு, வீறாப்பாய் உட்கார்ந்தான். மாட்டேன், பார்க்க மாட்டேன்; போனால்தானே பார்க்க. அப்போ...

  

சுயம்பு, அங்குமிங்குமாய் நோட்டமிட்டான். பின் பக்கமும், கிழக்குப் பக்கமும் சின்னச் சுவர்கள்தான். ஒரே தாவில் குதித்து விடலாம். தப்பித்தாக வேண்டும். இல்லையானால், வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டு, அந்த வீடே ஒரு லாக்கப்பாகும். இவன் பிரச்னையே, அந்த வீட்டுக்கு ஒரு தண்டனையாகும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.