சுயம்பு, கிழக்குப் பக்க சுவர் அருகே போனான். எக்கிப் பார்த்தான். சரிப்படாது. ஏதோ ஒரு கம்பெனி... பழையபடியும் பிடிபட்டு, முன்பக்கம் வழியாய் இந்தப் பின்பக்கத்திற்குக் கொண்டுவந்து விடுவார்கள். அவன், அந்தச் சுவரைப் பிடித்தபடியே பின்பக்கமாய் வந்தான். எட்டிப் பார்த்தான். குடிசைப் பகுதி. இதற்கும் அந்தப் பகுதிக்கும் இடையே ஏகப்பட்ட மரியாதைத் தனமான இடைவெளி.
அந்தச் சுவரில் கை போடப்போன சுயம்பு, தன்னையே பார்த்துக் கொண்டான். ஜட்டி. இதோடு போனால், அவன் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறானே, கீழ்ப்பாக்கம், அங்கே சேர்த்துவிடுவார்கள். அவன் மீண்டும் இருந்த இடத்திற்கே வந்தான். இப்போது போலீஸ் நடமாட்டம் முன்பக்கம்கூட அதிகமாக இல்லை. லேசாய் பின் கதவைச் சாத்தினான். கீழே குவியலாய்க் கிடந்த சேலையைப் பார்த்தான். அதன் மேலேயே பல பூட்ஸ் தடங்கள். அவன் அந்தப் புடவையை எடுத்தான். பச்சைக்கரை போட்ட வெளிர் மஞ்சள் புடவை. கட்டலாமா... பட்டறிவு எச்சரிக்க, அவன் பகுத்தறிவுவாதியானான். அந்தச் சேலையை அவன் இரண்டாகக் கிழித்தான். ஒன்றை இடுப்பில் சுற்றிக் கொண்டான். ஒன்றை இடுப்புக்குமேல் கழுத்துவரை சுற்றி உடம்பின் ஒரு அங்குல இடைவெளி தெரியாமல் தன்னை மறைத்துக் கொண்டான். மறைந்து கொண்டான்.
ஆனாலும், அவனுக்கு ஒரு உறுத்தல், போலீஸார் தன்னை இவ்வளவு தூரம் நம்பும்போது, இப்படிப் போகலாமா? ‘ஏன் போகக்கூடாது. காரணம் இல்லாமல் என்னை எதுக்காகக் கொண்டு வரணும். இந்தக் காரணமின்மையே நான் தப்பிக்க ஒரு காரணம்.’
சுயம்பு, பின்புறமாய் நகர்ந்து, அந்தச் சுவரைப் பிடித்தபடியே காவல் நிலையத்தின் பின் சுவர்ப்பக்கம் வந்தான். இரண்டு கைகளையும், ஊன்றியபடி ஒருபக்கமாய் உடலைச் சாய்த்து, அதில் ஏறினான். மறுபுறம் ‘காவாய்ச்’ சுவரில் குதித்தான். நல்லவேளை, யாரும் பார்க்கவில்லை. கிழக்குப் பக்கமாக ஓடினான். ஒரு முட்டுச் சந்து அங்கிருந்து, தெற்குப் பக்கமாய் போய், குடிசைப் பகுதிக்குள் மறைந்து. அதன் மேற்குப் பாதை வழியாய் நடந்து. மனிதக் கூட்டத்தில் கரைந்து அங்குமிங்குமாய் திரும்பித் திரும்பி ஓட வேண்டிய வெட்ட வெளியில் ஓடி, நடக்கவேண்டிய சந்தடிப் பகுதியில் நடந்து, நிற்க வேண்டிய ‘பல்லவப்’ பகுதிகளில் நின்று -