அறிவு வெளிப்பாட்டிற்கு வந்தது. பக்கத்து நகரங்களுக்கு எஸ்டிடி முலம் இந்தச் செய்தியை அவரே தெரியப்படுத்தினார். பிரதமர் இந்திரா காந்தியும் தான் பேசுவதைக் கேட்பார் என்று சந்தோஷம்.
அந்த வளாகத்தில் ஏழு மணிக்கே கண்கொள்ளாக் கூட்டம். சராசரிகளும் அலிக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பல்வேறு அலிப்பேட்டைகளிலிருந்து ஆட்கள் குவிந்தனர். நீலிமாவுக்கு இன்னும் கொஞ்சம் நன்றாக டிரஸ் செய்திருக்கலாம் என்று ஒரு ‘பின்புத்தி’. கங்காதேவி வீட்டுக்குள்ளிருந்த டி.வி. செட்டை ஆலமரத்தடித் திட்டில் வைத்துவிட்டாள். சரியாக ஏழு மணி முப்பத்தாறு நிமிடம். அறிவிப்புப் பெண்ணை அடித்துப் போட்டுவிடலாமா என்ற கோபம். அந்தக் கோபம் தீர்வதற்குள்ளேயே...
பனித்துளியில் பனைமரத்தைப் பார்ப்பதுபோல், அந்தச் சின்னத் திரையில் அந்த ஏரியாவை நிரூபிக்கும் லேண்ட் மார்க் ஷாட். கங்கம்மாவின் பேச்சு... இடையிடையே பீஷ்மர், சிகண்டி, அர்ச்சுனன். மாலிக்காபூர் ஆகியோரின் படங்கள். அப்புறம் நீலிமா கோஷ்டியின் ராகம் தானம் பல்லவி. அலிகளைப் பற்றிய சராசரிகளின் உயர்வான கருத்துக்கள். சுயம்புவின் தமிழ்க்குரல். அவன் பேசியதை அடக்கி, அதன்மேல் சத்தம் போட்டு ஒலித்த, இந்தி ஒவர்லாப்... இறுதியில், கங்கம்மாவின் வேண்டுகோள். கடைசியாக “இவர்களும் - நம்மவர்கள் - நல்லவர்கள்” என்ற டைட்டில், நீலிமா, தன்னைப் பாராட்டியே, தனக்குத்தானே கைதட்டினாள். நசிமாவுக்கு குளோசப்பில் வரவில்லை என்று ஒரு கவலை. குஞ்சம்மா, லட்சுமியோடு சண்டைபோடுவது டி.வி. யிலும் காட்டப்பட்டது. சுயம்பு தனது கதையைச் சொன்னது கண்ணிரை வரவழைத்தது.
கங்காதேவி சுயம்புவைத் தன் பக்கம் வரவழைத்து கட்டியணைத்தாள். ஒரு நாளிலேயே தன்னை ஊரறிய உலகறிய செய்து விட்டதற்காக அவனை அந்த டி.வி.யைப் பார்த்தது போலவே பார்த்தாள். பிறகு திட்டவட்டமாக அறிவித்தாள்.
“இன்று முதல், இவள் என்மகள். இதுக்கான சடங்கு சீக்கிரம் நடக்கும். அதுக்கு முன்னால பூப்பு நீராட்டு, சுவீகார சடங்கு, நாற்பது நாளுக்கு மேல்தான் நடக்கப் போகுது. ஆனாலும் இப்பவே சொல்லிட்டேன். அடுத்த சித்ரா பெளர்ணமியில பெண் சடங்க வச்சுக்கப் போறேன்! அப்புறம் அலி பட்டாபிஷேகம்...”
ஒரே கும்மாளம். ஒரே நீளவாக்கு கைதட்டல். கங்காதேவியை, மனதுக்குள் திட்டிய லட்சுமியும்