செய்வதுதானே? பொதுவுடைமைத் தத்துவ நாடுகளில் இதைக் கண்ணுங் கருத்துமாகச் செய்கிறார்கள். சுதந்திர சிந்தனை என்றாலும், சட்டதிட்டக் கூடுகளில் வளரும் செடியாகவே வளருகிறது. அவளும் அப்படித்தான் அம்மாவனும் அப்படித்தான். அவர்கள், காந்தி என்ற ஒருவர், இலட்சியம் என்று கண்ட சட்டதிட்டங்களுக்கு தம்மைப் பழகிக் கொண்டிருக்கின்றனர். யமுனாவுக்கு டெரிலீனும் காஞ்சிபுரமும் பிடிக்கவில்லை. பழக்கந்தானே காரணம்?
ஆனால்... இப்போதெல்லாம் காந்தியடிகளின் பெயரைச் சொன்னாலே அவள் மனமொன்றி விடுவதில்லை. அது குருட்டு பக்தி என்று அறிவு குறுக்கிடுகிறது. சத்திய வாழ்வு வாழ முடியுமா என்று அவர் தம்மைச் சோதனைக்குள்ளாக்கிக் கொண்டார். வெற்றியின் பிசிறுகளை உலகம் கண்டு கொண்டது. அவருடைய மட்டத்துக்கு கோடானு கோடியும் உயர முடியுமா? ஆழ்ந்து சிந்தனை செய்தால் சுதீர் கூறினாற் போல் வாழ்க்கையில் ஒரு போலித்தனம் வளரவே அவர் வழி காட்டி இருக்கிறார்...
திடீரென்று எங்கோ வழிமாறிப் போவது போல் குளிர் சிலிர்ப்பு ஓடுகிறது. உடல் குலுங்குகிறது இலேசாக.
"என்னைப் பற்றியே கேட்டியே? நீ இப்போ எங்கே போயிட்டிருக்கே அதைச் சொல்லலியே?"
"நானா? பெரியப்பா வீட்டுக்கு..."
"பட்டணமா?"
"ஆமாம்; பரங்கிமலைக்கும் பல்லாவரத்துக்கும் நடுவே வீடு... சந்தானம்னு, செகரிடேரியட்லேருந்து ரிடையராகி இருக்கிறார்."
"போன முனிசிபல் எலெக்ஷனில் சுதந்திரக் கட்சியிலே நின்னாரே அவரா?"
"ஆமாம். அப்படின்னு என்னை வரச்சொல்லி லெட்டர் கூட எழுதியிருந்தார்."
"நீ ஏன் வந்திருக்கக் கூடாது. யமு? நான் கூட்டணி பிரசாரத்துக்குப் போயிருந்தேன். அவரு கார்