"எனக்கே ஒரே பசி, உன்னால்... அடக்கிட்டிருந்தேன்."
அவள் இறங்க வேண்டித்தானிருந்தது.
மேல்மாடி... எங்கோ நீளப் போகிறான்.
குடும்பம் என்று போட்டிருக்கிறது. ஆனாலும் குடும்பம் ஒன்றும் அங்கு இல்லை.
"எனக்கு ஒன்றும் வேண்டாம்."
அவன் பொருட்படுத்தவில்லை. ஏதோ இனிப்பு கொண்டு வரச் சொல்கிறான் போலிருக்கிறது.
சர்வர் போன பின் அங்கே யாரையும் காணவில்லை.
மேசையில் முழங்கையை ஊன்றி முகத்தைத் தாங்கிக் கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். அவள் வெளி வாயிலைப் பார்க்கிறாள்.
தோளில் அவன் கை படிகிறது.
சுரீரென்ற உணர்வுடன் குலுங்கி எழுந்திருக்கிறாள்.
ஆனால் அவன் ஒன்றும் நடவாதது போல் சிரிக்கிறான்.
"சீ, விடுங்கள்!"
"ரொம்பக் கோவிச்சுக்கிறியே?"
கையை எடுத்துவிட்டான். ஆனால் அவளுடைய செருப்புக் கால்மேல் அவன் வெற்றுப் பாதம் படிகிறது.