Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 16 - சாவி
"அப்பா, கமலா காஞ்சீபுரம் போறாளாம்!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் பாகீரதி.
"ஏன்? என்ன அவசரமாம் அவளுக்கு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆறதே! இத்தனை நாள் தங்கியிருந்ததே அதிசயம்!"
"வாஸ்தவம்தான் அவள் எங்க இப்போ?"
"அம்புலுவைக் குளிப்பாட்டப் போயிருக்கா. மத்தியானம் பஸ்ஸுக்கே போகப் போறாளாம்."
"கிட்டாவையும் காணலையே?"
"தோட்டத்துலேந்து கொஞ்சம் கத்தரிக்கா பறிச்சிண்டு வரச் சொன்னேன். கமலா போறப்போ கொடுத்தனுப்பலாம்னு. மழை இல்லாம தோட்டமே வறண்டு கிடக்கு."
“அத பார், அக்கூ பட்சி கத்தறது. அது கத்தினா மழை வரும்னு சொல்லுவா."
"அது தினம்தான் கத்தறது. ஆனா அந்த மழைக்குத்தான் காது கேட்கலை! இப்படியே காஞ்சுதானா பயிர் பச்சையெல்லாம் வாடவேண்டியதுதான். தாது வருஷத்துப் பஞ்சம்னு சொல்வாளே, அந்த மாதிரி ஆயிடுமோ, என்னவோ?" என்றாள் பாகீரதி.
"உலகத்துல அக்கிரமம் அதிகமாயிடுத்து. அதான்" என்றார் கனபாடிகள்,
கமலா வந்தாள்,
"காஞ்சீபுரம் போறயாமே? போயிட்டு வா. ஒன்பது பத்தரை ராகுகாலம், அதுக்கப்புறமா புறப்படு. துணைக்கு யாரு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"நொண்டி கிட்டா தான்…" என்றாள் கமலா.