Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 17 - சாவி
மூர்த்தியைக் கண்டதும் பாகீரதிக்கு ஏதேதோ பேச வேண்டும்போலிருந்தது. பழைய நினைவுகளில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மேலிட்டுப் பேச முடியாமல் தடுமாறினாள்.
"இவர் தஞ்சாவூர் வேதபாடசாலைல சமைச்சிண்டிருந்தார். ஆனந்தராவ்னு பேர். ராவ்ஜினு கூப்பிடுவா. ராயர்னும் கூப்பிடுவா. சமையலுக்கு ஆள் வேணும்னு அப்பா எப்பவோ கேட்டிருந்தாராம். கிட்டப்பா இவருக்குத் துணையாக என்னை அனுப்பி லெட்டரும் எழுதிக் கொடுத்திருக்கார்."
"ஓகோ, அப்படிச் சொல்லு, அதனாலதான் வந்திருக்கேன்னு சொல்லு !" என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே சொன்னாள் பாகீரதி.
"அப்படித்தான் இருக்கட்டுமே!" என்றான் மூர்த்தி.
“சரி, இப்பவே இவரை சமைக்கச் சொல்லட்டுமா? உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. அதையே சமைக்கச் சொல்றேன்" என்றாள்.
மூர்த்தி இங்கே இரவு தங்கப் போகிறானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவே பாகீரதி தந்திரமாக இப்படி ஒரு கேள்வியைப் போட்டாள்.
"கனபாடிகளைப் பார்த்துப் பேசினப்புறம்தான் தெரியும்" என்றான் மூர்த்தி.
"புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கலையே நீ? வா, பார்க்கலாம்" என்று அவனைத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றாள்.
கன்றுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ”எப்படி இருக்கு?" என்று கேட்டாள்.
"ரொம்ப அழகா இருக்கு" என்றான்.
“உன்னாட்டம்" என்றாள்.