அவர் தோள் மீது ஏறி விளையாடியது.
"நீ போனப்புறம் இதுதான் எனக்கு செல்லப்பிள்ளை, இதை ஆசையோட வளர்க்கிறேன். பால் கொடுக்கிறேன். "ராமா, ராமா"ன்னு தினம் நூறு தடவை கூப்பிட்றேன். அதனால அந்த ராமன் பேரைச் சொல்ற புண்ணியம் கிடைக்கிறதே, அந்த ஒரு பலன்தான்! ஆனா இந்த அணிப் பிள்ளை கொள்ளி போடறதுக்கு உதவுமா? எனக்குச் சொந்தமா ஒரு பிள்ளை வேணாமா?" என்று வருத்தத்துடன் பெருமூச்செறிந்தார்.
கனபாடிகளின் பேச்சு மூர்த்தியைக் கண்கலங்கச் செய்தது.
"எனக்கு வயசாயிட்டுது, மூர்த்தி ! நான் இன்னும் ரொம்ப நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தோணலை. மனசுல எத்தனையோ விசாரங்கள். வெளியில சொல்லிக்க முடியாத துக்கங்கள். இன்னைக்குக் காலைலகூட அக்கிரகாரத்து பிராம்மணாளெல்லாம் கும்பலா வந்து ‘மழை இல்லாம ஊரே கஷ்டப்படறது. நீங்க வந்து விராடபர்வம் வாசிக்கணும்னு கேட்டுண்டா. நான் முடியாதுன்னுட்டேன். அவா என்னை பாய்காட் பண்ணப்போறதா பேசிண்ட சமாசாரமெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும். கிட்டா சொல்லியிருப்பானே! அவா வந்து போனதுலேந்து மனசே சரியாயில்லே. லேசா ஜூரம் வேற வீசறது. ராத்திரி எனக்கு எதுவுமே வேணாம். ரவாக் கஞ்சி மட்டும் பண்ணாப் போதும்னு சொல்லிடு. போ, பாகீரதியிடம் சொல்லிட்டு வந்துடு!" என்றார்.
மூர்த்தி சமையல் அறைக்குப் போய் "கனபாடிகளுக்கு உடம்பு சரியில்லை. "ராத்திரி ஆகாரம் எதுவும் வேண்டாம். ரவாக் கஞ்சி மட்டும் போதும்"னு சொல்லிட்டு வரச் சொன்னார்" என்றான்.
" நல்லவேளை ரவையும் சர்க்கரையும் தனித்தனியா டப்பாவில வச்சிருந்தேன். பூனை உருட்டி, அத்தனையும் கீழே கொட்டி, ரெண்டும் ஒண்ணாக் கலந்து போச்சு. அதைப் பிரிச்செடுக்க முடியாதே. அத்தனையும் வீணாப் போயிடுமே, என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிண்டிருந்தேன். வழி கண்டு பிடிச்சாச்சு ரவாக் கஞ்சியாப் பண்ணிடலாமே! ஆக, இந்த உலகத்துல எது கெட்டுப் போனாலும் அதையே நல்லதா மாத்திடறதுக்கும் ஒரு வழி இல்லாமப் போகலேன்னு தெரியறது" என்றாள்.
பாகீரதி என்ன சொல்கிறாள், எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்று மூர்த்திக்கு விளங்கி விட்டது!