தயங்கித் தயங்கி நின்றனர்.
"உள்ளே வாடா! வழி தெரிஞ்சுதா உனக்கு ! தஞ்சாவூர்லேந்தா வறே? இவர் யாரு?" என்று எதிர்பாராத மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார் கனபாடிகள்.
வெட்கமும், அச்சமும், குற்ற உணர்வும் மூர்த்தியைத் தலைகுணிய வைத்தன.
சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து, "என்னை மன்னிச்சுடுங்கோ! உங்ககிட்ட சொல்லிக்காமப் போனது மகர பெரிய தப்பு. உங்க வாயாலே மன்னிச்சேன்னு சொன்னாத்தான் என் மனசு ஆறும்" என்றான் மூர்த்தி.
"எனக்குத் தெரியும், நீ எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்னு. ஏன் சொல்லிக்காமப் போனே? எதுக்கு இங்க மறுபடியும் வரமாட்டேங்கறே? “ என்றெல்லாம் உன்னை நான் கேட்கப் போறதில்லே. உன் பேரில் எனக்கு வருத்தமோ கோபமோ கிடையாது. உன் இஷ்டப்படியே நீ தஞ்சாவூர்லயே படி, எங்க இருந்தாலும் வேதத்தை மறக்காதே. அவ்வளவுதான் நான் வேண்டுவது" என்றார்.
“வெள்ளிக்கடை கிட்டப்பா இந்த லெட்டரை உங்கட்ட கொடுக்கச் சொன்னார்" என்று கவர் ஒன்றைக் கொடுத்தான்.
"இவர் யார்னு சொல்லலையே!"
"சப்தரிஷி பாடசாலைல சமையல் வேலை செஞ்சிண்டிருந்தார். இங்க சமையலுக்கு ஆள் வேணும்னு நீங்க கேட்டிருக்தேளாம். கிட்டப்பாதான் இவரை என்னோடு கூட்டி அனுப்பிச்சார். இவரைக் கொண்டுவிட்டுட்டு கனபாடிகளிடம் பேசிட்டுவான்னு சொல்லி அனுப்பிச்சார், ஆனந்த ராவ்னு பேர்."
"ராவ்ஜியா! என்ன வயசு?"என்று கேட்டார் கனபாடிகள்
"அறுபது வயசு முடியப் போறது" என்றார் ராவ்ஜி