கடிதத்தை அவர் உரக்கப் படிக்கச் சொன்னதற்குக்கூட ஏதாவது உள் அர்த்தம் இருக்க வேண்டும். அவர் மன ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டான்.
பூஜை முடிந்து, சாப்பிட்டானதும் கனபாடிகளை நமஸ்கரித்து "ஊருக்கு போயிட்டு வரேன்" என்று சொன்ன போது அவர் உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து புத்தம் புது பட்டு வேட்டி ஒன்றை எடுத்து வந்தார்.
இந்தா, பிரம்மசாரிக்கு நாலு முழம் வேட்டி போதும். என்னிடம் இந்த எட்டு முழம் வேட்டிதான் இருக்கிறது. இப்போதைக்கு இதை இரண்டாக மடித்துக் கட்டிக்கொள். என் ஆசீர்வாதம் !" என்றார்.
"இப்போதைக்கு என்றால் அதற்கு என்ன அர்த்தம்?" என்று யோசித்தபடியே பின்கட்டுக்குப் போனான். அங்கே பாகீரதி கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்தாள்.
"போயிட்டு வரேன் பாகீரதி" என்று அவளிடம் சொல்லிக் கொண்டபோது அவள் கண்கள் பனித்திருப்பதைக் கண்டு "வருத்தமா?" என்று கேட்டான்.
"எனக்கு நீ அத்தை பிள்ளை ஆகப்போறயே, அந்த சந்தோஷம் !" என்றாள் பாகீரதி!
"உனக்கெப்படி தெரியும்?"
"ராத்திரி லெட்டரை உரக்கப் படிக்கச் சொன்னாரே, அப்பா! எல்லாத்தையும் கேட்டுண்டுதான் இருந்தேன்" என்றாள்.
"ஒகோ! நீ கேட்கணுங்கறதுக்குத்தான் உரக்கப் படிக்கச் சொன்னார் போலிருக்கு. இப்பத்தான் புரியறது!" என்றான்.
"வந்ததும் வராததுமாக் கிளம்பிட்டயே ! அப்படி என்ன அவசரம்? அந்தக் கூத்தாடிப் பெண் முகம் மறந்து போச்சோ?" என்று குத்தலாய்க் கேட்டாள் பாகீரதி.