"அவள் ரொம்ப நல்ல பெண். நீ நினைக்கிற மாதிரி யெல்லாம் இல்லே" என்று சொல்லிவிட்டு அவசரமாய்க் கிளம்பிவிட்டான்.
தஞ்சாவூர் போய்ச் சேர்ந்ததுமே கனபாடிகள் எழுதித் தந்த கடிதத்தைக் கிட்டப்பாவிடம் கொடுத்தான்.
அதை அவர் பிரித்துப் படித்தார்.
"கிட்டப்பாவுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் படித்தேன். எனக்குப் பூரண சம்மதமே. கெளரி விருப்பப்படியே நடக்கட்டும். ததாஸ்து" என்று சுருக்கமாக எழுதியிருந்தார்.
"மூர்த்தி உனக்கு சமாசாரமெல்லாம் தெரியுமோ? கனபாடிகள் சொன்னாரா?" என்று கிட்டப்பா கேட்டார்.
"தெரியும்; உங்க லெட்டரை என்னிடமே கொடுத்துப் படிக்கச் சொன்னார்."
”படிச்சயா?"
"படிச்சேன்."
"கெளரிக்குப் பிள்ளையாகப் போறதுல உனக்குச் சம்மதம் தானே? கனபாடிகளுக்கு என்ன பதில் சொன்னே?"
"கிணத்துல விழச் சொன்னாலும் விழத்தயார்னு சொன்னேன்!"
"எல்லாக் கிணத்துலயும் இப்ப தண்ணியே இல்லாம வறண்டு கிடக்கே, அந்த தைரியமா!" என்று கேட்டுச் சிரித்தார் கிட்டப்பா.
அவனும் சிரித்தான்.