கருத்துக் கதைகள் – 42. இன்னா செய்தாற்கும் இனியவே செய்திடுக... - தங்கமணி சுவாமினாதன்
புகழ் பெற்ற கோயில்கள் நிறைந்ததும் சிறந்த வர்த்தகத் தலமுமாகிய அவ்வூரில் அமைந்திருந்தது அந்த ஹோட்டல்.உணவு வகைகள் அனைத்தும் மிகவும் தரமாக இருக்கும் என்பதால் வெளியூரிலிருந்து கோயில்களுக்கு வரும் பக்தர்களும்,வியாபாரிகளும் இந்த ஹோட்டலுக்கே உணவருந்த வருவார்கள் என்பதால் எப்போதும் கூட்டமாகவே இருக்கும்.
அக்ஹோட்டலில் ராமு, சேகர் என இருவர் சர்வராக வேலை பார்த்து வந்தனர்.இதில் ராமு தேனி போல் சுறுசுறுப்பானவன்.சாப்பிட வருபவர்களை இன் முகத்தோடு வரவேற்று அவர்களின் தேவைகளை மிக அக்கறையோடு கவனிப்பான்.இனிமையாகப் பேசுவான்.அவர்களைக் காக்க வைக்காமல் அவர்கள் கேட்பதை உடனுக்குடன் கொண்டு தருவான்.சில சர்வர்கள் வந்தவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அதற்குரிய பில்லை ஒரு தட்டி வைத்து மேஜையில் வைத்துவிட்டு அவர்கல் தரும் டிப்ஸ்க்காக காத்திருப்பதும் மெனு கார்டில் பில்லை வைத்து விட்டு அதில் ஏதும் தனக்கு பணம் வைத்திருக்கிறார்களா என்றெல்லாம் பார்க்க மாட்டான்.
அப்படி யாராவது தனக்கு டிப்ஸ் தர முயன்றால் கூட முதலாளி எனக்கு போதுமான சம்பளம் தருகிறார் எனவே எனக்கு டிப்ஸ் வேண்டாமென பவ்யமாய் மறுத்து விடுவான்.சாப்பிட்டு விட்டுச் செல்பவர்கள் இவனைப் பற்றி கல்லாவில் அமர்ந்திருக்கும் முதலாளியிடம் மிகவும் புகழ்ந்து பேசிவிட்டுச் செல்வார்கள்.
முதலாளிக்கு இவனை மிகவும் பிடிக்கும்.
ஆனால் இந்த சேகர் இருக்கிறானே சேகர் அவன் எல்லா விஷயத்திலும் ராமுவுக்கு எதிரானவன்.சாப்பிட வந்து செல்பவர்கலெல்லாம் சேகரைப் பற்றி முதலாளியிடம் குறை சொல்லிச் செல்வார்கள்.பல முறை முதலாளியும் சேகரைக் கண்டித்திருக்கிறார்.ஆனால் அவன் மாறவே இல்லை.மாறாக அவனுக்கு ராமு மீது பொறாமையும் கோபமும் ஏற்பட்டது.அவனை பழிவாங்கக் காத்திருந்தான்.
ஒரு சமயம் சேகர் சொந்த காரியம் காரணமாக ஊருக்குப் போனான்.அவன் சென்றிருந்த நேரம் ஹோட்டலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.திரும்பி வந்த அவனுக்கு இவ்விபரம் தெரியாது.அவன் ராமுவைப் பழிவாங்க ஒரு திட்டத்தோடு வந்திருந்தான்.அதற்கு உதவ தன் மாமாவை அழைத்து வந்திருந்தான்.அத்திட்டத்தின் படி சேகரின் மாமா ஹோட்டலுக்கு சாப்பிட வந்தார்.அவரின் பர்ஸில் ஐயாயிரம் ரூபாய் பணமும் ஒரு தங்க மோதிரமும் வைக்கப் பட்டது.கூடவே அவரின் பர்ஸ்தான் என நம்ப வைப்பதற்காக அவரின் புகைப் படமும் அதில் வைக்கப்பட்டது.அந்த பர்ஸ்ஸை சேகர் உடைமாற்றும் இடத்தில் இருந்த ராமுவின் பையில்(காலை வேலைக்கு வந்ததும் அவரவர்கள் தங்ககளின் உடையைக் களைந்துவிட்டு ஹோட்டலின் யூனிஃபாமை அணிய வேண்டும்.பழைய உடைப் பையில் வைக்கப்பட்டு ஒரு அறையில் வைக்கப் படும்)....ராமுவுக்குத் தெரியாமல் வைக்கவேண்டு.மாமா சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்குப் பணம் கொடுக்க பர்ஸ்ஸைத் தேடுவார்.திருட்டுப்போய் விட்டதாகக் கத்துவார்.எல்லோரையும் சோதனை இடுவார்கள்.ராமுவின் பையில் பர்ஸ் இருப்பது கண்டு பிடிக்கப் படும்.ராமு அவமானப் படுவான்.
முதலாளி அவனை வெறுப்பார்.அவனுக்கு வேலை போகும் என நினைத்தான்.இத்திட்டைத்தைச் செயல் படுத்தினான்.போலீஸ் வந்தது.முதலாளி போலீஸிடம் சிசிடிவி பற்றிக் கூறினார். சிசிடிவி கேமரா இருப்பது பற்றி அறியாத சேகர் இது கேட்டு அதிர்ந்து போனான்.போலீஸார் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்த போது சேகர் பர்ஸை ராமுவின் பையில் கொண்டு போய் வைப்பது பதிவாகியிருப்பதைக்கண்டனர்.
பொறாமையின் காரணமாக சேகர் சேகர் செய்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.முதலாளி அவனை வேலை நீக்கம் செய்தார்.போலீஸ் அவனை கைது செய்தது.தலை குனிந்தபடி போலீசின் பின்னால் சென்றான் அந்த பொறாமை பிடித்தவன்.
ஆனால் ராமுவுக்கு சேகரை எண்ணி பாவமாக இருந்தது.தன் முதலாளியிட சேகரை மன்னித்து மீண்டும் அவனை வேலைக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டினான்.சேகரை ஜாமீனில் வெளியே எடுக்க அவர் உதவ வேண்டும் எனவும் வேண்டினான்.முதலாளியும் ராமுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
மீண்டும் வேலையில் சேர்ந்த சேகர் இப்போது திருந்தி விட்டான்.ராமுவுக்கு நல்ல நண்பனாகவும் ஆகிவிட்டான்.தனக்கு தீங்கு செய்த சேகருக்கு நல்லது செய்து அவனைத் தன் நண்பனுமாக்கிக்கொண்ட ராமுதான் எவ்வளவு நல்லவன்.
கதை சொல்லும் கருத்து:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்....