சிறுகதை - அணிகலன் - K.சௌந்தர்
அன்று காலை திடீரென பெய்த லேசான மழை ஜன்னல் வழியே தெரிந்ததால் உறக்கம் கலைந்த ஆஷிக் கண்களை கசக்கி விட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். அவனது அறை மாடியில் இருந்தது. தென்னை மரத்தின் கீற்றுகள் அசைந்தாடியன. ஒன்றிரண்டு ஓலைகள் ஜன்னல் வழியே நீண்டு அவனை ஸ்பரிசித்தது தென்னை மரம் கைநீட்டி அவனை எழுப்ப முயல்வதுபோல் இருந்தது.
கடிகாரம் ஏழு மணியைக் காட்டியது.
கதவை தட்டும் சத்தம் கேட்டு சோம்பல் முறித்தபடி எழுந்து சென்று கதவைத் திறந்தான் ஆஷிக். எதிரில் நீலச் சேலையில் அப்போதுதான் குளித்திருந்த புதுமலர் போல அவன் தாயார் மஞ்சுளா கையில் காபிக் கோப்பையுடன் நின்றிருந்தாள் .
"என்ன செல்லூஸ் காலைலே எழுப்பிட்டேன்னு கோபமா? வேணும்னா காபி குடிச்சிட்டு திரும்ப படுத்துக்கோ. இன்னிக்கி ஞாயிறு தானே" என்றபடி உள்ளே வந்து காபியை அவனிடம் கொடுத்தாள். அவனுக்கு இருபத்திமூன்று வயதானாலும் இன்னும் தாய்க்கு அவன் ‘செல்லூஸ்’ தான்.
“உட்காரும்மா..” என்றவன் அவள் உட்கார்ந்ததும் சற்று நகர்ந்து அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.
"ம்க்கூம் ...இதுக்குதான் உட்காரச் சொன்னியா? டேய் ,உனக்குத்தான் இன்னிக்கு வேலையில்லை. எனக்கு எவ்வளோ வேலையிருக்கு தெரியுமா, கூட உதவி செய்ய எனக்கு என்ன பெண் குழந்தையா இருக்கு? எந்திரிடா..." என்று அவன் தலையை தூக்கி மீண்டும் தலையணையில் வைக்க முயன்றாள்.
அவன் இன்னும் அழுத்தமாக மடியில் படுத்தபடி "ம்ஹீம் ..இன்னும் பத்து நிமிஷத்துக்கு நா அசையறதா இல்லை. ம்மா... செல்லம் கொஞ்சறதுக்கு உனக்கு என்னை விட்டா வேற பிள்ளைங்களே இல்லை . என் கிட்டேயே பிகு பண்றியா ?" என்றான்.
சற்றுநேரம் அவன் தலையை வருடிவிட்டபடி அமர்ந்திருந்தவள் பத்து நிமிடம் ஆனதும் "சரிப்பா லேட்டாகுது பாரு .. உங்கப்பா வேற எங்கேயோ போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தார் . நா போயி டிபன் செய்யணும். நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்" என்றபடி கிச்சனுக்கு சென்றுவிட்டாள் .
காலை டிபனை மஞ்சுளா எடுத்து வைக்க அவனும் அவன் தந்தை ராஜனும் சாப்பிட ஆரம்பித்தனர்.
"ஆஷிக் உன் ஆபீஸ் பத்தி சொல்லு. வேலைல சேர்ந்து ஒரு வாரமாச்சே ..இன்னிக்கிதான் பிரீயா பேச முடியுது" என்றார் ராஜன்.
ஆஷிக் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஒருவாரமானது. தினமும் அவன் வருவதற்கு இரவு எட்டுமணியாகிவிடுவதால் அதற்குமேல் எதுவும் பேச முடிவதில்லை.
அவனும் அவன் வேலை பற்றி உடன் வேலை செய்பவர்கள் பற்றி நிறைய சொன்னாலும் அவன் பேச்சு அவனது டீம் லீட் சுதர்ஷனாவையே சுற்றி சுற்றி வந்தது. சற்றுநேரம் கவனித்துவிட்டு "அந்தப் பொண்ணு யாருப்பா" என்று சற்று பயத்துடன் கேட்டாள் மஞ்சுளா.
“எந்தப் பொண்ணு?” என்றவன் " ஓ ..”என்று நகைத்துவிட்டு “நீ பயப்படற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லை. சுதர்ஷனா என்னோட பாஸ் . அவுங்களுக்கு முப்பது வயசு. ஐந்து வயசு பையன் இருக்கான். ஆபீஸ் நேரம் தவிர மத்த நேரம் நா அவுங்கள அக்கான்னுதான் கூப்பிடுவேன். உன்ன மாதிரியே அவுங்களும் எம்மேல ரொம்ப அக்கறையா இருப்பாங்க. நீ உனக்கு பெண் குழந்தையில்லன்னு இனிமே வருத்தப்பட வேணாம். அக்காவை ஒருநாளைக்கு நா இங்கே கூட்டிட்டு வர்றேன், உனக்கு அவுங்களை ரொம்ப பிடிச்சுடும் பாரேன் " என்றான்.
மஞ்சுளாவால் அப்போதுதான் ஒழுங்காக மூச்சுவிட முடிந்தது.
“இன்னிக்கி நா அக்காவுக்கு ஏதாவது கிப்ட் வாங்கப்போறேன்,..” என்றபடி சென்று அழகிய காதணிகள் ஒருசெட் வாங்கி வந்தான்.
மறுநாள் வழக்கம் போல ஆபீஸ் சென்றவன் உணவு இடைவேளையின் போது "அக்கா... இது உங்களுக்கு நல்லாயிருக்கும்னு வாங்கினேன், தப்பா நெனைச்சுக்காம வாங்கிக்கோங்க " என்றபடி காதணி செட்டை கொடுத்தான்.
"இதுல தப்பா நெனைக்க என்ன இருக்கு. உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. தேங்க்ஸ் " என்றபடி வாங்கி கொண்டாள் சுதர்ஷினி.
“நேர்மையா? என்னக்கா சொல்றீங்க " என்றான் புரியாமல்.
“ஆமாம், நீ நெனைச்சிருந்தா அந்த கம்மலை உன் அம்மா எனக்காக வாங்கி கொடுத்ததா பொய் சொல்லியிருக்கலாம் . ஆனா நீ நீயே வாங்கினதுன்னு உண்மையை சொன்னியே , அதைத்தான் சொன்னேன்" என்றாள் .
அவளது புத்தி கூர்மையை கண்டு மனதுக்குள் வியந்து போனான் ஆஷிக் .
ஒருவாரம் ஓடியது. அன்று காலை உள்ளே நுழைந்ததும் சுதர்ஷனாவை எதிரில் பார்த்துவிட்டு "குட்மார்னிங் " சொன்னான், அவள் எனோ பதிலே சொல்லவில்லை. ஒருவேளை ஏதாவது கோபமோ என்று நினைத்தவன் அவள் மற்றபடி இயல்பாக பேசவும் ஒருவேளை நாம விஷ் பண்ணதை கவனிக்கல போல . என்று எண்ணியபடி சென்றுவிட்டான்.